காலைக் கதிரவன் கண்விழிக்க; தேனீயிடம் சொன்னேன்!

Su.tha Arivalagan
Jul 30, 2026,12:31 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


காலைக் கதிரவன் 

கண்விழிக்க;


தேனீயிடம் சொன்னேன்;

"இரு! உன்னிடம் ஒரு வினா!

பதில் சொல்லிப் பறந்து போ" என்றேன்.


"கதிரவன் விழிக்க

தாமரை மலரும் நேரம்

மது அருந்தி 

மகரந்தம் சேர்க்கும் நேரம்;

பின்னர் நான் வந்து உன் வினாவுக்கு பதில் அளிக்கிறேன் " என்றே  பறந்தோடியது.


சிற்றெறும்பு ஒன்றை தடுத்து 

வினா வைக்க

"பொழுதில்லை இப்போது

கதிரவன்  வித்திட்டான்

வாயிலில் அரிசி மா கோலம் பூத்திருக்கும். 

உணவு சேகரிக்க

விரைய வேணும்" என்றது




மாஞ்சோலை கிளிகளும்,

தென்னந்தோப்பு  குயில்களும்,

என் வினாவை உன்னித்து 

கேட்காமல் பறந்தோடின!


பள்ளி செல்லும் சிறார், ஒன்று

"கேள்விகள் கேட்டு 

நாளை  ஏன் கடத்துகிறாய்?

வினவுதல் புறம் தள்ளி

வினைகள் புரிய;

வினாக்கள், வினவ  

வினாடி நேரம் கூட

உனக்கு; எட்டா கனி!

விழித்தெழுந்து வினை புரி"


என்றே என்னைத் தூண்ட

வினாக்கள் எல்லாம் மறக்க

வினைபுரிய எழுந்தேன்

செஞ்சுடரோன்

வெண்சுடரோன் ஆகி

என்னையும் சுடரோனாக்கினான்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)