அலுவலக அவசரம்

Su.tha Arivalagan
Jun 01, 2026,04:15 PM IST
- சசிகலா விஸ்வநாதன்

காலை வேளை அவசரம்.. 
காலனும் கைகட்டி 
காத்து தான் இருக்கணும். 

பிள்ளைகளை பள்ளிக்குத் தள்ளிவிட்டு, 
அவரின் கோப பார்வையை தவிர்த்து, 
அத்தையின் வசவுகளை விழுங்கி, 
காலை உணவை மறந்து, 
ஆசையாய் எடுத்து வைத்த 
பருத்திப் புடவையை ஒதுக்கி,
நெளு நெளு  பூனம் சேலையை உடுத்தி,





கைப்பையை தேடி
பேருந்துக்கு சில்லறை எடுத்து 
வைக்கும் நேரத்தில்,
இடது கையால்
நெற்றியில் ஸ்டிக்கர் 
பொட்டை அழுத்தி
ஓட்டமும் நடையுமாக ஓடி
பேருந்து நிறுத்தத்தில் நின்றதும்,
பேருந்து இன்னும் போகவில்லை;
என்ற நற்செய்தி  கேட்டதும்,
நினைவில் வந்தது;

மறந்து வைத்துவிட்டு வந்த
மதிய உணவு டப்பா!
கண்ணில் பொங்கும் நீரை மறைக்க;
கை தேடுதே ,
கருப்பு கண்ணாடியை.
எதிரே வந்த 
அடுத்த வீட்டுக்காரியின்
நமட்டு பார்வையிலிருந்தும்,
உதட்டு சுழிப்பிலுமிருந்தும்,
காப்பாற்றும் தெய்வமாக,
வந்து நின்றது;
என் பேருந்து 73/A

(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்).