தனிமை துறந்தவன்!

Su.tha Arivalagan
Jul 06, 2026,01:14 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஒற்றை மனிதன்

இருக்கிறான்!

இருக்கிறானா?

இருந்தும்;

இல்லாமல் ஆகி இருக்கிறான்! 

தாயற்ற அவன்,

ஓராயிரம்  எண்ணங்களில்

புதையுண்டு போய்

இயம்ப இயலா மந்தணங்களினால்;

மூச்சடைத்துப் போனான்.




இனிய தந்தையின் அன்பினால் மட்டும்; இன்னும் இருந்து கொண்டிருக்கிறான்.

தனியாய் இருக்கவும் இயலாமல்...

தனி மனிதனாய் 

தந்தையை தனியே விட்டு,

வெளியே கிளம்பவும் மனமின்றி; 

தயங்கி தவித்த அவனுக்கு, விடுதலை வந்தது.


வீட்டுச் சிறையிலிருந்து அவனை விடுவித்தது.

அன்பு தந்தையின் மரணம்.

அவன் பற்றின அந்தரங்கம் அவனோடு போகட்டும்!


வீட்டைப் பூட்டி வெளியேறினவனை, அக்காவின்

அலை பேசி அழைத்தது;

"தம்பி! எப்போ கிளம்புகிறே?

தனியா இருக்காதே." 


இள மென்னகை மின்னியதோ; அவன் முகத்தில்?

இனி தனிமை என்பதில்லை; அவனுக்கு.

அவள் அறிய மாட்டாள்; அதை.


அலைபேசியின்

 பழைய சிம் கார்டை  எடுத்து தெரு ஓரத்தில் வீசி;

புது  சிம் கார்டை 

செருகி பேசலுற்றான்; 

"இனி ஒரு  தளையில்லை.

புறப்பட்டு விட்டேன்!

நான் நம் இல்லம் வருகிறேன்!


அடுத்த  முனையில்

"வா! காத்திருக்கிறேன்" 

என்றான்; அவன்



(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)