தனிமை துறந்தவன்!
- சசிகலா விஸ்வநாதன்
ஒற்றை மனிதன்
இருக்கிறான்!
இருக்கிறானா?
இருந்தும்;
இல்லாமல் ஆகி இருக்கிறான்!
தாயற்ற அவன்,
ஓராயிரம் எண்ணங்களில்
புதையுண்டு போய்
இயம்ப இயலா மந்தணங்களினால்;
மூச்சடைத்துப் போனான்.
இனிய தந்தையின் அன்பினால் மட்டும்; இன்னும் இருந்து கொண்டிருக்கிறான்.
தனியாய் இருக்கவும் இயலாமல்...
தனி மனிதனாய்
தந்தையை தனியே விட்டு,
வெளியே கிளம்பவும் மனமின்றி;
தயங்கி தவித்த அவனுக்கு, விடுதலை வந்தது.
வீட்டுச் சிறையிலிருந்து அவனை விடுவித்தது.
அன்பு தந்தையின் மரணம்.
அவன் பற்றின அந்தரங்கம் அவனோடு போகட்டும்!
வீட்டைப் பூட்டி வெளியேறினவனை, அக்காவின்
அலை பேசி அழைத்தது;
"தம்பி! எப்போ கிளம்புகிறே?
தனியா இருக்காதே."
இள மென்னகை மின்னியதோ; அவன் முகத்தில்?
இனி தனிமை என்பதில்லை; அவனுக்கு.
அவள் அறிய மாட்டாள்; அதை.
அலைபேசியின்
பழைய சிம் கார்டை எடுத்து தெரு ஓரத்தில் வீசி;
புது சிம் கார்டை
செருகி பேசலுற்றான்;
"இனி ஒரு தளையில்லை.
அடுத்த முனையில்
"வா! காத்திருக்கிறேன்"
என்றான்; அவன்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)