தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)

Su.tha Arivalagan
Sep 05, 2026,02:20 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


நீராழி கரையில், 

எண்திசை தெய்வமென

விரிந்த மலராசனத்தில்

அலர் அரவிந்த கரங்கள்;

சிறு உந்திச் சுழலாழி;


அகன்ற  மார்பில்

அணி மணிகளுடன்:

முப்புரி நூலும், கங்கணமும்,;

மேல் கை வளைப்பும்;




உயர்த்திய  இரு கரங்களில் 

சங்கமும், பத்மமும்,

செவ்வாழை பூ நேர்

சங்கு கழுத்தும்;

அதை அணி செய்யும்    

கண்டிகையும்;


என் மன்றாடல் கேட்கும் 

மகர குழையுடை  

நீள் செவியும்;

அருள் பொழி மலர் முகம் 

ஒரு மூன்றில்,

பூத்த குமிண் புன்னகையும்;


மோன தவத்தில் அமைந்த 

இரு மூன்று கண் மலரும்,

வில்லென வளை

புருவ மத்தியில் நம்

அம்பென எழும்பும்

கூர்  நுதல் திலகமும்;

உச்சியில் ஒருங்கும்

மும்முடி  மகுடமும்;

காட்டுவெதெல்லாம்; ஒன்றே!


இயற்கையைத் தொழு.!

இயற்கையை நேசி!

இயற்கையை பணிந்து கல்!

இயற்கையிடம்  அமைதி கொள்!


காற்றிலும் கனலிலும்

அனலிலும் புனலிலும் 

மண்ணிலும்  விண்ணிலும்- விரி

வானிலும் விசும்பிலும்

நானும் நீயும் 

அறியும்  செறிவறிவு

வேறெங்கும்  நான் காணேனே


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)