Short Story: குறுக்கே வராதீர்

Su.tha Arivalagan
Jul 14, 2026,04:56 PM IST

- சசிகலா விஸ்வநாதன்

 

"ஏங்க, நாமே இதை செய்யவில்லை என்றால், வேறு யார்தான் செய்வார்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்". பிரேமா அவனிடம் வாதாட ஒரு முறைப்புதான் அவனுடைய பதிலாயிருக்க; அவள் , " இதை கேளுங்க! இதை நான் பார்த்துக்கிறேன்; நீங்க ஊடாலே வராதீங்க. சொல்லி விட்டேன்". என்று கறாராகச்  சொன்னாள் ராம் தன் கோபத்தை பைக்கை உதைப்பதில் காண்பித்ததை கவனித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளே போனாள்.


"‌பெற்ற அப்பாவைக் கூட்டி வந்து ஒரு கண் ஆபரேஷன் செய்யக்கூட சடவா;என்று சலித்துக் கொண்டே உள்ளே போனாள்,பிரேமா.


ஆயிரம் செலவிருக்கு, எனக்கு, இங்கு. இவள் மாமனாரை கூட்டி வந்து சீராட நினைக்கிறாள்; என்று மனைவியை மனதிற்குள் நொந்து கொண்டே போனதில், எதிரே வந்த பழ வண்டி பெரியவரை கவனிக்கத் தவறிவிட்டான். 




கீழே விழுந்த பெரியவர், " ஏம்ப்பா! ஊடாலே வந்தே? கண்ணு தெரியாம நான் , தட்டுத் தடுமாறி பொழப்பை எம்மட்டோ பார்த்திட்டு இருக்கேன். உபகாரம் பண்ணலைனாலும், ஊடாலே வந்து உபத்திரவம் பண்ணதான் ஆளுங்க வரீங்க." என்றதும்; அவனுக்கு, "சொரேல்" என மனதில் உறைத்தது.


" ஐயா! மன்னிச்சுருங்க"  என்று அவரை சமாதானப் படுத்திய கையோடு, பிரேமாவிற்கு குறுஞ் செய்தி ஒன்று அனுப்பினான்;


"சரி! இந்த வாரம் குடியாத்தம் போய் அப்பாவை அழைத்து வருகிறேன்"


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)