அருணாச்சலப் பிரதேச விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனப் படைகள் இந்திய வீரர்களைத் தாக்குவதாக ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது.
இருப்பினும், இந்த வழக்கின் மேல் விசாரணை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
டிசம்பர் 2022 இல் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் நடந்த இந்தியா-சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கருத்து தெரிவித்தபோது, 2,000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது அரசையும் சரண் அடைந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அதில், ராகுல் காந்தி சீனாவுடனான மோதல் குறித்து ராணுவம் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என்று கூறியிருந்தார். கடந்த மே மாதம், லக்னோவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் இதுதொடர்பாக சம்மன் பிறப்பித்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மசிஹ் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு நீதிபதி தத்தா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்தியாவின் 2,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் ஒரு உண்மையான இந்தியர் என்றால்... இப்படி எல்லாம் பேச மாட்டீர்கள் என்று நீதிபதி தத்தா ராகுல் காந்தியின் கருத்துகள் குறித்து கருத்து தெரிவித்தார். நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் நம்பகமான ஆதாரம் உள்ளதா? என்று நீதிபதி ராகுல் காந்தி தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அவரால் இப்படிப் பேச முடியாவிட்டால்... அவர் எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்? என்று வாதிட்டார்.
ஆனால் நீதிபதி தத்தா உடனடியாக குறுக்கிட்டு, அப்படியானால் இதுபோன்ற விஷயங்களை நாடாளுமன்றத்தில் ஏன் பேசுவதில்லை? என்று பதில் கேள்வி எழுப்பினார்.
வாதங்களின் இறுதியில், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உரிய விசாரணை நடத்தாமல் குற்றப் புகாரை காவல் துறை பதிவு செய்தது உட்பட, குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ததில் வெளிப்படையான உள்ள தவறுகளை சிங்வி சுட்டிக் காட்டிய பின்னரே இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.