கமல் படத்தைத் தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?.. கன்னட அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
டெல்லி: எடுத்ததற்கெல்லாம் உணவுர்களைப் புண்படுத்தி விட்டதாக கூறுவது அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. ஒரு ஸ்டேண்ட் அப் காமெடியன் ஏதாவது பேசினால் புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டுவதும், கவிதை ஒன்றுக்காக குற்றம் சாட்டுவதும் என்ன மாதிரியான மனப் போக்கு.. நாடு எங்கே போகிறது.. ஒருவரது பேச்சுக்காக ஒரு படைப்பை தடுத்து நிறுத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
கமல்ஹாசனின் தக்லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டும். படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். படத்தைத் தடுத்து நிறுத்த யாரேனும் முயன்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தக்லைப் படம் கர்நாடகாவில் திரைக்கு வருவதற்கு வழி பிறந்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் மொழியின் பெயரால் யாரேனும் படங்களை திரையிட மாட்டோம், தடுப்போம் என்று அடாவடியில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டாக வேண்டும் என்ற நிலையையும் இந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.
தக்லைப் பட விழாவின்போது கமல்ஹாசன் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வராது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கமும் கூறியது. கர்நாடக மாநில அமைச்சரும் கூட இதையே கூறியிருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றமோ, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதற்கு ஏன் ஈகோ பார்க்கிறார். மன்னிப்பு கேட்டால்தான் படம் வரும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் கர்நாடகத்தில் தக்லைப் படம் திரையிடுவதற்கு உத்தரவிட வேண்டும். பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. முதல் கட்ட விசாரணையின்போது கர்நாடக அரசுக்கும், கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர். கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கச் சொன்னது ஏன் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தது உச்சநீதிமன்றம். அதைத் தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்நாடக அரசுத் தரப்பில் படம் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் முன்வந்தால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் படத்தை திரையிட விடாமல் தடுத்து நிறுத்தியதால் ரூ. 30 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாநில அரசு அளித்துள்ள உறுதிமொழியைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. மேலும் இன்றைய விசாரணையின்போது நீதிபதிகள் பல்வேறு முக்கியக் கருத்துக்களை வெளியிட்டனர். நீதிபதிகள் வெளியிட்ட கருத்துக்கள்:
(கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு) சிலர் வந்து மிரட்டியதால் படத்தைத் தடுத்ததாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறுகிறது. கும்பல் வந்து மிரட்டினால் அதற்குப் பணிந்து போவீர்களா.. அதற்காக ஒரு படத்தை தடுப்பீர்களா? மிரட்டல்களுக்கும் அழுத்தங்களுக்கும் பணிந்து போவது சரியா? ஏன் காவல்துறையில் நீங்கள் புகார் தரவில்லை. வன்முறையாளர்களுக்கு எதிராக நீங்கள் செயல்படவில்லை. மாறாக அவர்களுக்குப் பின்னால் போய் மறைந்து கொண்டுள்ளீர்கள்.
(கன்னட சாஹித்ய பரிஷத்துக்கு) எதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கேண்டும் என்று சொல்கிறீர்கள். அதற்கான தேவை என்ன வந்து விட்டது. சட்டத்தை உங்களது கையில் எடுக்க முடியாது. உங்களது உணர்வுகள் புணப்டுத்தப்பட்டதாக நினைத்தால் அவதூறு வழக்குதானே தொடர முடியும். படத்தை எப்படி தடுக்க முடியும். எந்த வகையிலும் ஒரு படத்தைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது. முறையாக சென்சார் சான்றிதழ் வாங்கிய ஒரு படத்தை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.
(கர்நாடக மாநில அரசுக்கு) திரைப்படம் திரையிடப்படுவதை உறுதி செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எந்தத் தனி நபரோ அல்லது அமைப்பினரோ படத்ததை திரையிடுவதை தடுக்க முயன்றால், அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அதைத் தடுத்து கடும் நடவடிக்கை எடு்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.