பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

Su.tha Arivalagan
Jul 15, 2026,12:11 PM IST

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிபதிகளின் அணுகுமுறை மற்றும் உணர்வுப்பூர்வமான புரிதல் தொடர்பான தேசிய நீதித்துறை அகாதமி குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் இணையதளங்களிலும் உடனடியாகப் பதிவேற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. 


இந்நிலையில், அண்மையில் (ஜூலை 9 அன்று) பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அந்தத் தீர்ப்பில், பெண் ஒருவரின் ஆடைகளைக் களைந்து அவரது மார்பகங்களைப் பிடித்தது, பாலியல் வன்கொடுமை முயற்சி என்ற பிரிவின் கீழ் வராது என்றும், அது பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்ததாக மட்டுமே கருத முடியும் என்றும் பாட்னா உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும், கீழமை நீதிமன்றம் குற்றவாளிக்கு விதித்த தண்டனையைக் குறைத்தும் உத்தரவிட்டிருந்தது.




இதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, பாட்னா உயர் நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறைக்குக் கடும் அதிருப்தி தெரிவித்தது. பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் உரிய சட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற உணர்வற்ற போக்குகளை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நீதித்துறை கையேட்டில் உள்ள வழிகாட்டுதல்களை அனைத்து நீதிமன்றங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போதும் இந்த விதிகளின்படி செயல்பட மாநில அரசுகள் காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


இது தொடர்பான விரிவான தீர்ப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.