அமலாக்கத்துறையின் டாஸ்மாக் ரெய்டுகள்.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. இடைக்காலத் தடை

Su.tha Arivalagan
May 22, 2025,05:00 PM IST

டெல்லி: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


டாஸ்மாக் விவகாரம் தொடர்பான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறும் கூறி அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


டாஸ்மாக் தலைமையகத்தில் சமீபத்தில் அமலாக்கத்துறை தொடர் ரெய்டுகளை நடத்தியது. இதையடுத்து டாஸ்மாக் நிறுவனத் தலைவர் விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர் விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணைகள் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. இந்த ரெய்டுகளை வைத்து ஏகப்பட்ட செய்திகளும் யூடியூப் சானல்களில் அலை அலையாக கிளம்பி வந்தன. 




இந்த நிலையில் இந்த சோதனைகள் தற்போது உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. அமலாக்கத்துறையின்  நடவடிக்கைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் இதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு அப்பீல் செய்தது. அந்த மனு மீதுதான் இன்று இந்த கடுமையான உத்தரவு வந்துள்ளது.


டாஸ்மாக் சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.


டாஸ்மாக் ரெய்டுகள் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. நீதிபதிகள் கூறிய கருத்துக்கள்:


அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும், எல்லைகளையும் மீறி நடந்துள்ளது. இதுதொடர்பான மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்குப் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


தனி நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யலாம், விசாரணை நடத்தலாம். ஆனால் நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அனைத்து வரம்புகளையும் மீறி நடந்து கொண்டுள்ளீர்கள்.


ரூ. 1000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கூறுகிறது. அப்படியானால் அதுதொடர்பான மூல வழக்கு விவரம் என்ன? எந்த மூல வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கு நடக்கிறது. அனைத்து ஊழியர்களின் போன்களையும் பறிமுதல் செய்து குளோன் செய்துள்ளீர்கள். இது தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் செயல். டாஸ்மாக் விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவத்தை மீறியுள்ளது அமலாக்கத்துறை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.