இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
பரமக்குடி: தவெக தலைவர் விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. இது ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை தான். இருவரும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து கொள்வார்கள். நான் பாமகவில் இருந்தவன்.
ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்களுக்காக மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஆனால், விஜய் அவ்வாறு மக்களைச் சந்திக்கவில்லை. ஒரு நட்சத்திரப் பிரபலம் என்றால் வாக்குகள் மட்டும் கேட்க வருவீர்களா? இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.
2026 தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் போது தான் விஜய்யின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது தெரியும். பாஜக கொள்கை எனக்கு எதிரி என்றால், காங்கிரஸின் கொள்கை என்ன உங்களுக்கு உடன்பாடா?. திமுக அரசியல் எதிரி என்றால், அதிமுக அரசியல் நண்பனா?
பள்ளிக் குழந்தைகளை பசியோடு பள்ளிக்கு வர வைத்தது தான் திமுக அரசின் சாதனை. இலவசங்களை கொடுத்து மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்தவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களைத் தலை நிமிர வைப்பேன் என்று கூறுவது சாதனை அல்ல, வேதனை என்று தெரிவித்துள்ளார்.