Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

Su.tha Arivalagan
Aug 11, 2026,10:10 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்) பற்றிப் பேசவேண்டிய நேரத்தில், அதை வாசித்தவரின் மொழிப் புலமையைப் பற்றிச் சிந்திக்கச் சொல்வது தற்போதைய சூழலுக்குக் கால விரயம் என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.


சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்தை சொல்லி வருபவர் சீனு ராமசாமி. அந்த வகையில் தமிழ்நாடு சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ் உச்சரிப்பு குறித்த விவாதம் தொடர்பாக தனது கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:


ஒருமுறை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் என்னிடம் பேசும்போது சொன்னார்:


"சீனு, நான் வசனங்களைத் தமிழில்தான் எழுதுகிறேன். ஆனால் என் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலம் கெடுத்துவிட்டது."




உங்களுக்குப் புரிகிற மாதிரிச் சொல்ல வேண்டுமென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வசனங்களைச் சற்று வேகமாகப் பேசுவதற்கும், கமல்ஹாசன் அவர்கள் வசனங்களைப் பேசுவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசம்,

நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கும் அண்ணன் சிவகுமாருக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போன்றது.


சில நேரங்களில், சிறப்பாக எழுதக்கூடியவர்களால் இயல்பாகப் பேச முடியாமல் போவதற்கும் இதுவே காரணமாகிறது. எழுதுவது வேறு, பேசுவது வேறு என்ற முரண் இங்குப் பெரிதாகிவிடுகிறது.


உதாரணத்திற்கு, விவிலியத்தைப் பாதிரியார் பீட்டர் பெர்சிவல் தமிழில் மொழிபெயர்த்தபோது, அவருக்கு உதவிய இலங்கையின் ஆறுமுக நாவலர் அதைச் செறிந்த இலக்கண நடையில் அமைத்தார். இதன் விளைவாக, எழுத்து மொழியும் வழிபாட்டு மொழியும் பேச்சு வழக்கிலிருந்து விலகி, வேறு ஒரு தளத்திற்குச் சென்றன.


இது, காஞ்சி மகா பெரியவர் அருளிய 'தெய்வத்தின் குரல்' நூலின் நடைக்கும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு நடைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது.


இலக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், லா. சா. ரா. அவர்களுக்கும் கி. ராஜநாராயணன் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.


நாம் எந்த மொழியில் சிந்தித்துக் கருத்தாக்கம் செய்கிறோமோ, அதுவே நம் மனத்திற்கு இயல்பான மொழி.


உதாரணமாக, அமெரிக்காவில் பிறந்து வளரும் ஒரு தமிழ்க் குழந்தைக்குத் தமிழ் சிந்திக்கும் மொழியாக இருப்பதில்லை. அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் புரிந்தாலும், மனதிற்குள் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புரிந்துகொண்டு, பதிலையும் ஆங்கிலத்திலேயே கூறுகிறார்கள். இதன் விளைவாகவே, பேச்சுவழக்கில் தமிழும் ஆங்கிலமும் கலந்த 'மணிப்பிரவாள' நடையும், ஒருவித உச்சரிப்புத் தொனியும் பிறக்கின்றன.


ஆழமாக யோசித்துப் பார்க்கையில், ஒரு மனிதனின் உண்மையான தாய்மொழி என்பது அவனது சிந்தனை மொழிதான் என்ற உண்மை புலப்படுகிறது.


"செந்தமிழும் நாப்பழக்கம்" என்பார்கள் பெரியோர்கள்.


மொழி என்பது தகவல்தொடர்புச் சாதனம் என்றாலும், அது நம் சிந்தனையின் வடிவம். தொடர்ச்சியான உரையாடலும் தாய்மொழியிலேயே சிந்திக்கும் வழக்கமுமே ஒரு மொழியைத் தன் இயல்பான அழகோடு நாவில் நிலைநிறுத்தும்.


மேலும், "சொல்வதற்குச் சொற்கள் தேவையில்லை" என்று எழுதியவன் நான். 


தமிழ்நாடு சட்டமன்ற நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்) பற்றிப் பேசவேண்டிய நேரத்தில், அதை வாசித்தவரின் மொழிப் புலமையைப் பற்றிச் சிந்திக்கச் சொல்வது தற்போதைய சூழலுக்குக் கால விரயம்.


இவை என் அனுபவத்தால் நான் உணர்ந்தவை. தவறு இருந்தால் திருத்தவும் என்று அவர் கூறியுள்ளார்.


மக்களே, உங்களது கருத்து என்ன?