சீற்றத்தில் சிஸ்டர் நிர்மலா.. தினந்தோறும் தீ மிதிக்கும் சீதா.. (சீதா - 2)

Su.tha Arivalagan
Oct 28, 2025,03:54 PM IST

- கி. அனுராதா


ஒன்பதாம் வகுப்பில் நுழைவு தேர்வுக்கான கேள்வித் தாள் சீதாவிடம் கொடுத்தனர். ஏளனமான பார்வையுடன் இவள் எப்படி முடிப்பாள் என்று நகைத்தனர்.  தமிழில் ஐந்து கட்டுரைகள், ஆங்கிலத்தில் இரண்டு அறிவியலில் இரண்டு சமூக அறிவியல் பாட இரண்டு என்று அனைத்தும் கட்டுரையாகவே இருந்தது. 


பாவம் அவர்களுக்கு தெரியாது சீதா மாவட்ட அளவில் சிறந்த கட்டுரையாளர் என்ற பட்டத்தை எட்டாம் வகுப்பிலேயே எடுத்தது. அவளுக்கு கொடுத்த நேரத்தில் அனைத்தும் எழுதி முடித்தாள். தமிழ் ஆசிரியை ஆரோக்கியமேரியிடம் விடைத்தாள் தந்தனர். தாளைத் திருத்தியதும் சீதாவை ஆரத் தழுவிக் கொண்டார்.  மிக அருமையான சொற்களைத் தேர்ந்தெடுத்து மேற்கோளுடன் எழுதி இருந்தாய். நீடுழி வாழ் என்று ஆசிர்வாதம் செய்து தலைமை ஆசிரியரிடம் 95 மதிப்பெண்கள் பெற்ற தாளைக் கொடுத்தார்.




பாதிரிய சகோதரி நிர்மலா ஆங்கில ஆசிரியர். இங்கு மட்டும் பாதிரிய சகோதரி என்று குறிப்பிடக் காரணம் வரும் நாளில் தெரிய வரும். பாதிக்கு மேல் உண்மை கதை என்பதால் சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம்.


அவரும் தாள்களைத் திருத்தி 96 மதிப்பெண்களுடன் தலைமை ஆசிரியர் முன் சமர்ப்பித்தார்.  தலைமை ஆசிரியர்,  சரி !  இப் பெண்ணைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். தன்னை எதிர்த்து பேசியதால் மீண்டும் சீதாவை சோதிக்க திட்டம் தீட்டினார் சிஸ்டர் நிர்மலா. அரை மணி நேரத்தில் ரூபாய் 1500 கட்டாவிட்டால் அதோ பார் 3000 தருவதற்கும் தயாராக இருக்கும் பெற்றோர்கள் ,போ, முடிந்தால் பணத்தோடு வா என்றார். 


ஒலிப் பெருக்கியில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளின் வரிசையில் முதல் பெயராக சீதாவின் பெயரைக் கேட்டவுடன் அவர் தந்தைக்கு மட்டில்லாத மகிழ்ச்சி.  சீதா விரைந்து வந்து தந்தையிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் கூறி பணம் உடனடியாக கட்ட வேண்டும் என்று கூறினாள். தந்தையோ , வா பார்க்கலாம் என்று நண்பர் ஒருவரின் மிதிவண்டி வாங்கி இருவரும் வீட்டிற்கு 10 நிமிடத்தில் வந்தடைந்தனர்.  இருப்புப் பெட்டியில் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. அம்மாதத்தின் காய் கனி வாங்க எடுத்து வைக்கப்பட்ட பணம். ஆனால் மீதி 1000!!!!!!


யாரைக் கேட்பது.  விவாதங்களில் பெற்றோர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பாட்டி வந்தார். அனைத்தும் அறிந்தப்பின் 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். தக்க சமயத்தில் உதவியவர்க்கு நன்றிக் கூறி பள்ளிக்கு விரைந்துச் சென்று பணத்தைக் கட்டினர்.  நிம்மதி பெருமூச்சு விட்டாள் சீதா. பாவம் அவளுக்கு சிஸ்டர் நிர்மலாவின் வஞ்சினத்தால் தினம் தினம் தீ மீது நிற்க வைக்கப்படுவாள் என்று தெரியாமல் மற்ற இரு சகோதரிகளுக்கும் புத்தகம் வாங்கச் சென்று விட்டாள்.


முதல் நாள் வகுப்பு ஆரம்பித்தது.  சற்றும் எதிர்பாராத விதமாக சிஸ்டர் நிர்மலா சீதாவின் வகுப்பிற்குள் நுழைந்தார். சீதாவை முறைத்துப் பார்த்தப்படி ,  நான் உங்கள் வகுப்பு ஆசிரியர் என்றார். சீதா என்ன நடக்கப் போகிறதோ என்று கலக்கத்துடன் வணங்கி அமர்ந்தாள். முதல் நாளே சீதாவிற்கு மட்டும் மிக கடினமான வீட்டு பாடங்களைக் கொடுத்தனர். தினமும் செவ்வனே முடித்து வந்தாள். 


சிஸ்டர் நிர்மலா இளங்கலை பட்டம்( B.Ed)  படித்துக் கொண்டு இருந்தார். சீதாவின் கையெழுத்து ஈர்த்ததால் தன் பாட நூல்களில் இருந்து அவளை எழுதச் சொன்னார்.  முதலில் நகல் சரியாக இருந்தால் ,  நேரடியாக பாடப் புத்தகத்தில் எழுதச் சொன்னார்.  இப்பொழுது சிஸ்டர் நிர்மலா பாடத்தின் வரைமுறைகளையும் எழுதச் சொன்னார். சீதாவை அழைத்து, நீ உன் தங்கைகளுக்கு நீயே பாடம் எடுப்பதாக கேள்விப்பட்டேன் உண்மையா என்றுக் கேட்டார். அவளும் ஆம் என்று தலை ஆட்டினாள். அப்படியானால் இப் பாடத்தினைப் படித்து எப்படி வகுப்பு எடுப்பாய் என்று எழுதி வா என்றார். 


சீதாவும் வழக்கம் போல் அனைத்துப் பள்ளி வேலைகளை முடித்து, தன் தங்கைகளை படிக்க வைத்து விட்டு சிஸ்டர் நிர்மலா அவர்கள் கொடுத்த பணியை நிறைவுச் செய்தாள். மணியோ இரவு ஒன்று. சோர்வில் அயர்ந்து உறங்கினாள்.  மறுநாள் எழுதிய தாளை சிஸ்டரிடம் ஒப்படைத்தாள். வியந்துப் போய் பார்த்தார். மிகவும் நேர்த்தியாக எழுதி இருந்ததுக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.


சீதாவின் பிரச்சினைத் தீர்ந்தது என்று தானே நினைக்கிறீர்கள். அடுத்தது என்ன செய்யக் காத்திருக்கிறார் சிஸ்டர் நிர்மலா என்பதை அடுத்த வாரம் காண்போம்.


(தொடரும்)


(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)