சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை
சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் (ஏப்ரல் 1ம் தேதி) முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுமார்3 முதல் 5 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால், கார்களுக்கான கட்டணம் ரூ.5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100 வரையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வளைகுடா போரினால் உலகெங்கும் எரிபொருள், சமையல் எரிவாயு கிடைக்காமல் தொழில்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படுவதை ஒன்றிய அரசு உணர வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும். இது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் வழிவகுத்துவிடும் அபாயமும் உள்ளது.
மேலும், 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி என்கிற அரசின் அறிவிப்பும் அமலுக்கு வரவில்லை. சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலைப் பராமரிப்பு என்கிற பெயரில் கட்டண வசூல் தொடர்வதும், அந்தச் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே இருந்துவருகின்றன.
சாலைகளில் தரமற்ற பணிகள், பராமரிப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும்.
இதுபோன்று நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பது ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள், போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.