நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் தவெக சார்பில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கிட்டதட்ட மாநாடு போலவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், திமுகவினரை விஜய் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இந்த பேச்சு இன்றளவும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. விஜய்யின் பேச்சிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்து பல்வேறு தலைவர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தவெக சார்பில் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்து சொல்வார்கள்.
தவழும் குழந்தை தான் வளரும். வளர்ந்தால் தான் பெரியவர்கள் ஆவார்கள். பெரியவர்கள் ஆனால் தான் தன்னாச்சி நடத்துவார்கள். அது தான் வாழ்க்கை. களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்ப்பளிக்கும். பொங்கல் முடிந்த பின்னர் எங்கள் திருப்புமுனை எப்படி அமைத்திருக்கிறது என்பதை நாடே வியந்து பார்க்கும் என்று தெரிவித்துள்ளார்.