டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

Su.tha Arivalagan
Jul 31, 2026,03:04 PM IST

டில்லி : டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அவரை கைது செய்ய தடை விதித்து, இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


வழக்கின் பின்னணி:

டாஸ்மாக் மதுபான பார் டெண்டர் ஒதுக்கீடு, மதுபான கொள்முதல் மற்றும் பார் உரிமங்களில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.




இந்த வழக்கில் கைதை தவிர்க்கும் பொருட்டு, செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அரசுப் கருவூலத்திற்குப் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், காவலில் எடுத்து விசாரணை நடத்துவது அவசியம் என்றும் கூறி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அந்த மனுவைத் தள்ளுபடி நேற்று செய்தார்.


உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நிவாரணம்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த  உத்தரவை எதிர்த்து, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணையின் போது செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.


உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகள்:


செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், பின்வரும் கண்டிப்பான நிபந்தனைகளை விதித்துள்ளது:

- லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்குச் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

- தனது கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

- சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது ஆதாரங்களைச் சிதைக்கவோ முயற்சி செய்யக்கூடாது.


மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை உரிய சான்றுகளுடன் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியத்தை நிரூபித்தால், இந்த முன்ஜாமீன் உத்தரவில் மாற்றம் செய்ய பரிசீலிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட, மறுநாளே உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்குக் கிடைத்துள்ள இந்த இடைக்கால நிவாரணம், அவரது ஆதரவாளர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.