டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

Su.tha Arivalagan
Jul 30, 2026,10:51 AM IST

சென்னை: டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தொடர்பான நிர்வாக நடைமுறைகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கரூரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடும் அடங்கும். செந்தில் பாலாஜியின் பெற்றோரை தொடர்ந்து, சென்னையில் வைத்து அவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.


லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் செந்தில் பாலாஜியிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.


இன்று விசாரணை:




தாக்கல் செய்யப்பட்ட இந்த முன்ஜாமீன் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி இளந்திரையன், முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.


முன்னதாக, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் கீழ் கைதாகி, நீண்ட காலம் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, பிறகு உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதோடு தவெக எம்எல்ஏ., இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டு, அதிலும் அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளார். திருவல்லிக்கேணி காவல் நிலையில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.