அன்பு எனும் ஆயுதம்
- செ. சாந்தி சின்னத்தம்பி
ஆயுதம் என்ற பேரெதற்கு அன்பிற்கு ?
சிந்தித்தேன்...
பகைவனை வீழ்த்தும் கூர்வாளின் வேகம் போல்
மனங்களை வீழ்த்துவதாலா?...
பாறையை உடைக்கும் உளியின் கூர்மை போல்
கல் மனங்களை உடைப்பதாலா?
களைகளை வெட்டும் அரிவாள்போல்
இறுமாப்புகளை வெட்டுவதாலா?...
துணியிடைக் கிழிசலை இணைக்கும் ஊசியைப் போல்
விலகிய மனங்களை இணைப்பதாலா ?
பூமியைப் பிளக்கும் ஆழ்துளைக் கருவி போல்
மனக்குற்றங்களைத் தூர்வாரித் துளைப்பதாலா?...
அறிந்தேன்....
முடிவுக்கு வந்தேன்...
ஆயுதம் என்பது தற்காப்பு ...
அன்பு என்பதுதான் காப்பு.... உணர்ந்தேன் ....
அன்பு என்னும் ஆயுதம் புதிய வார்ப்பு ....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)