ஒரு மிடறு!
- சசிகலா விஸ்வநாதன்
ஒரு மிடறு நீர் போதும்
என் விடாய்
தணிந்து விடும்.
குடுவை நீரில்
ஒரு கோப்பை;
ஏன் தர மறுக்கிறாய்?
ஒரே ஒரு சொல் போதும்
என் வெறுமை களைய,
ஒரு நூறு கவிதை பாடும் வாயினால்
ஒரு சொல் எனக்காக உதிராதா?
ஒரே ஒரு பார்வை போதும்
என் உயிர் துளிர் விட;
வெற்றுப் பார்வை விட்டு
சற்றே கனிவுடன்
ஒரு பார்வை
என் உயிர் தங்குமே!
ஒரே ஒரு தீண்டல் போதும்;
என் நம்பிக்கை நீள;
ஒரு தொடுகையில்
'நான் இருக்கிறேன்'
என்று
இயம்பலாகாதா?
ஆகும்!
ஆகாதெல்லாம் ஆகும்!
நீ நீயாக இருந்தால் மட்டுமே ஆகும்!
அதற்கு,
நீ நானாக வேண்டும்!
மனப்பிணக்கம் விட்டு!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)