சிக்கனம் அறிந்த சவுக்கு மரம்!

Su.tha Arivalagan
Feb 13, 2026,12:56 PM IST

ஆ.வ.உமாதேவி


சவுக்கு மரம் குறைந்த பராமரிப்பில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, அதிக லாபம் தரும் ஒரு தொழில் துறை மரமாகும். இது மணல் மற்றும் செம்மண் நிலங்களில் நன்கு வளரக்கூடியது. மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் அறுவடைக்கு வரும். குறிப்பாக காகித ஆலைகளுக்கு எரிபொருளாகவும் கட்டுமான பணிகளுக்கும் பயன்படுகிறது. 


ஒரு ஏக்கருக்கு சுமார் 40 முதல் 50 டன் வரை மகசூல் தரக்கூடியது. தண்ணீர் வசதி குறைந்த இடங்களில் வளர்வதால், வறட்சியை தாங்கும் வகையில் இதன் இலைகள் ஊசி வடிவில் காணப்படும்.1.5×1.5 மீட்டர் அல்லது 2×2 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.


ஜூன் அல்லது ஜூலை அல்லது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடவு செய்தல் நலம் தரும். முதல் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 




குளோன் சவுக்கு ரகங்கள் அதிக வளர்ச்சி தரும் மரங்களாகும். உரங்களை பயன்படுத்துவதால் இதன் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மரம் சராசரியாக 45 அடி உயரம் வரை வளரும். அதன்பின் அறுவடை செய்யலாம். 


நிழல் அதிகமாக இருந்தால், மரம் தடித்து வளராமல் மெலிந்தே காணப்படும். எனவேதான், முறையான இடைவெளி விடுதல் மிகவும் அவசியம். 


காகித ஆலைகளுக்கு விற்கும் போது அதிக லாபம் கிடைக்கும். இது கடற்கரை ஓரங்களில் இயற்கையாகவே வளரக்கூடியது. 


சுங்குனியானா, கப்பாளங்கு- குப்பாங், திமுர், கேம் ப்ளாங், போட்ஷா போன்றவை சவுக்கு மரத்தின் ரகங்கள் ஆகும். 


வன ஆராய்ச்சி நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட  ரகங்களை பயிரிடுவது அதிக லாபம் தரும். 


புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்களை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை சவுக்கு மரம் நமக்கு கற்றுத் தருகிறது. அதாவது குறைந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதிகளவு சுத்தமான காற்று, குளிர்ச்சி மற்றும் லாபத்தை தருவது போல நாமும் வாழ்வோம்.


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)