வாய்ப்புண் தொல்லை ஜாஸ்தியா இருக்கா??.. சீக்கிரம் குணமாக எளிய பாட்டி வைத்தியம்!
- ச.சித்ராதேவி
நமது அன்றாட வாழ்வில் உடல் உஷ்ணம், மன அழுத்தம் அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வாய்ப்புண். இது வந்துவிட்டால் சரியாகச் சாப்பிடவோ, பேசவோ முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவோம். காரமாக எதையும் சாப்பிடவே முடியாது. சூடாகவும் சாப்பிட முடியாது.
இந்தப் பிரச்சினைக்கு, ஆங்கில மருந்துகளைத் தேடிச் செல்வதை விட, நம் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை வைத்தே வாய்ப்புண்ணை, வாயை விட்டு விரட்டியடிக்க முடியும்.
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த முன்னோர்கள் நமக்களித்த சில எளிய பாட்டி வைத்திய முறைகளைக் கீழே காண்போம்.
1. நாவல் பழ மருத்துவம்
நாவல் பழம் துவர்ப்புச் சுவை கொண்டது மற்றும் இது வாய்ப்புண்ணிற்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
நன்கு பழுத்த நாவல் பழங்களை எடுத்துச் சுத்தமான நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதனுடன் சிறிது உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
2. பலா இலை கஷாயம்
பலா மரத்தின் இலைகளும் மருத்துவ குணம் கொண்டவை என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதை வைத்து ஒரு எளிய மருந்து தயாரிக்கலாம்.
பலா இலைகளைத் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், அந்த இலைகளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். இலையின் சாறு இறங்கியதும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
வடிகட்டிய நீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால் வாய்ப்புண் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
3. மோர் வைத்தியம்
உடல் சூட்டினால் வரும் வாய்ப்புண்ணிற்கு மோர் ஒரு அருமருந்து. இதை விட குளுமையான பானமும் எதுவும் கிடையாது.
வெறும் மோராக இல்லாமல், மோரில் சிறிது உப்புச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இந்த மோரை வாயில் ஊற்றி, முழுங்காமல் சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். சற்று நேரம் கழித்து வாயைக் கொப்பளித்துத் துப்ப வேண்டும்.
இதைப்போல தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் வாய்ப்புண் பூரணக் குணமடையும்.
இயற்கையான முறையில் கிடைக்கும் இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. எளிய செலவில், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வாய்ப்புண்ணை எளிதாகக் குணப்படுத்தலாம். இருப்பினும் நாவல் பழம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதற்கு முன்பு உங்களுககு ஏதாவது அலர்ஜி இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளவும், இருந்தால், உரிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு சாப்பிடவும்.
(ச. சித்ராதேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)