விசித்திரமான தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்.. இது புதுசா இருக்குண்ணே.. ரொம்பப் புதுசா இருக்கு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பல விசித்திரமான முடிவுகளைக் கொடுத்துள்ளது. எந்த ஒரு தேர்தலிலும் இப்படி நடந்தது இல்லை என்று கூறும் அளவுக்கு பல வித்தியாசமான அம்சங்களைக் கொண்டதாக மாறியுள்ளது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் படு வித்தியாசமான முடிவுகளைக் கொடுத்துள்ளது. எல்லாத்துக்கும் காரணம் விஜய்தான். அவரது அரசியல் வருகை பல ஜாம்பவான்களைத் தூக்கி வீசியுள்ளது. பல பாரம்பரியங்களை அடித்து நொறுக்கியுள்ளது. பல சம்பிரதாயங்களை காலி செய்துள்ளது.
ஒரு புதிய அரசியல் வரலாற்றை எழுதியுள்ளார் விஜய். ஒரு ஒற்றை மனிதருக்காக ஒட்டுமொத்த அரசியலும் தடம் புரண்டு புதிய அவதாரம் எடுத்திருப்பது இந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாதது என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் அரசியலில் புரட்சி படைத்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. ஆனால் அவரையே மிஞ்சி விட்டார் விஜய். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
இந்தத் தேர்தலில் ஒரு சுவாரஸ்யம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆட்சியில் இருந்து வந்த, 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட திமுக இந்தத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் 54 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றுள்ளது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினால் எதிர்க்கட்சித் தலைவராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அவர் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் இந்தத் தேர்தலில் அவர் வென்றும் கூட எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கிறார்.
இதென்ன.. இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கே என்று சொல்வது போல, இத்தனை அமளிகளுக்கும் வித்திட்டவரான விஜய்க்கும் வித்தியாசமான முடிவை வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். அதாவது விஜய் முதலிடத்தைப் பிடித்தும் கூட அவருக்குப் பெரும்பான்மை பலத்தை வாக்காளர்கள் கொடுக்கத் தவறி விட்டனர். இதனால் மற்றவர்களின் ஆதரவுடன்தான் விஜய் ஆட்சியமைக்கப் போகிறார்.
இன்னும் பல ஸ்பெஷல்கள் இந்தத் தேர்தல் முடிவுகளில் இருக்கின்றன.. தொடர்ந்து பார்ப்போம்.