வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

Manjula Devi
Apr 29, 2025,06:31 PM IST

சென்னை: அக்னி நட்சத்திரம் வரப் போகிறது. கத்திரி வெயில் எனப்படும் இந்த காலகட்டத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும். உக்கிரத்தில் இருக்கப் போகும் வெயில் கொடுமையிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.


தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக வெயில் சதத்தை தாண்டி கொளுத்துகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உற்சாகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் மே நான்காம் தேதி தொடங்கி,மே 28ஆம் தேதி வரை நடைபெறும். 

இந்த 25 நாட்களில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். அதன்படி, கோடை வெயிலை சமாளிக்க சில பயனுள்ள வழிகள்:


நிறைய தண்ணீர் குடிங்க: 




அதிக அளவில் தண்ணீர் பருகுங்கள். ஒரு நாளுக்கு குறைந்தது 2.5லி முதல் முடிந்த அளவு நீர் பருக வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க முடியும்.


பகலில் வெளியே போகாதீங்க: 


மதியம் 11 மணி முதல் பிற்கல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் உச்சமாக இருக்கும். அவ்வேளையில் வெளியே செல்ல வேண்டாம். பொதுவாகவே பகலில் வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியில் போகாமல் இருப்பது நல்லது.


பருத்தி உடைகள் நல்லது: 




தூய்மையான, இலகுவான, வெளிர் நிற ஆடைகளை (பருத்தி) அணியுங்கள். கதர் ஆடைகள், பருத்தியால் செய்யப்பட்ட துணிகள் வெயில் காலத்திற்கு உகந்ததாகும். 


தொப்பி, குடை அவசியம்: 


வெளியில் செல்லும்போது தொப்பி, குடை அல்லது ஒரு துணியை பயன்படுத்தி தலையை சூட்டில் இருந்து காக்க வேண்டும். வெறும் தலையுடன் வெயிலில் அலைந்தால் சூடு அதிக அளவில் உடலுக்குள் இறங்கும் அபாயம் உள்ளது.


குளிர்ந்த உணவுகள் : 


பழச்சாறு, நார்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கன், மட்டன் போன்ற கடினமான உணவுகளை இந்த காலகட்டத்தில் குறைத்து சாப்பிடுவதும் அவசியம்.


குளிர்பதனப் பொருட்கள் தவிர்க்கவும் : 


ரசாயனம் கலந்த செயற்கை நிறமிகள் கலந்த  குளிர்பானங்களை (கார்பனேற்றப்பட்ட பானங்கள்) அதிகம் வாங்கி அருந்த கூடாது. அதற்குப் பதில் இளநீர், எலுமிச்சம் பழ ஜூஸ் போன்றவை நல்லது.


அடிக்கடி முகம் கழுவுங்க : 


தவிர்க்க முடியாத காரணங்களால் சில நேரம் வெளியே செல்ல நேர்ந்தால், அந்த வேலைகளை முடித்து விட்டு பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் முகம் மற்றும் கைகளை கழுவ வேண்டும். வீட்டில் இருந்தாலும் கூட முகம், கைகளில் அடிக்கடி தண்ணீர் தெளித்து உடலை  குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும்.


காற்றோட்டம் அவசியம்: 


வீட்டின் உட்புற காற்று வெளியே செல்லுமாறும், வெளிப்புற காற்று உள்ளே வரும் மாறும் வீட்டின் ஜன்னல்கள் அனைத்தும் திறந்து வைக்க வேண்டும். அதே சமயத்தில் சூரிய ஒளி வீட்டிலும் புகாதவாறு வெளிர் நிற திரைகளை பயன்படுத்த வேண்டும்.


இதனுடன் நமது  உடல்நலத்தையும், மன நலத்தையும் பாதுகாக்க வேண்டும். அது எப்படி பாதுகாக்க வேண்டும். அதாவது,


 1.உடல் நீர்ச்சத்தை பராமரித்தல்:


தண்ணீர் பருகுதல் : 




ஒரு நாளுக்கு 8-10 கிளாஸ் (2.5-3 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமாக இருக்காவிட்டாலும் அடிக்கடி குடிக்க வேண்டும். அப்போது தான் நா வறட்சியை தடுக்க முடியும்.


மோர் நல்ல இயற்கையான எலக்ட்ரோலைட் கொண்ட பானம். இவை உடலில் நீர்ச்சத்தை உறுதி செய்யும்.


அதேபோல் எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு உப்பு கலந்த  பானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளால் நமது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க முடியும்.


2. உணவு பழக்க வழக்கங்கள்:




தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய், சுரைக்காய், எலுமிச்சை, பழச்சாறு, கேரட், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதேசமயம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.


மேலும் சாப்பிடும் உணவுகள் தூய்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சாலையோரம் தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தூசி, மாசுகளால் உணவுகளில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். 


3.முன்னேற்பாடுகள் அவசியம்:


தண்ணீர் மற்றும் துணிகளை தயாராக வைத்திருங்கள். ஏனெனில்  வாந்தி, வியர்வை, களைப்புக்கு உடனடி தீர்வாக இருக்கும்.


கார்,வாகனங்களில் இருக்கும்போது காற்றோட்டம் சரியாக இருக்க வேண்டும். மூடிய வாகனங்களில் நீண்ட நேரம் இருப்பதை  தவிர்க்க வேண்டும்.


4. உடல்நிலை எச்சரிக்கைகள்:


வெயில் காலங்களில்  திடீரென அதிகமாக வியர்வை, தலைசுற்றல், வாந்தி, வேகமான இதயத் துடிப்பு, மனச்சுழற்சி போன்றவை இருந்தால் வெப்ப காய்ச்சலாக இருப்பதை மருத்துவரிடம் சென்று உறுதி செய்து அதற்கு உண்டான நிவாரணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.