இந்து சமய அறநிலையத் துறை சார்பில்.. 70 வயது பூர்த்தி அடைந்த 100 தம்பதிகளை கௌரவிக்க திட்டம்!

Manjula Devi
Apr 30, 2025,10:46 AM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த 100 தம்பதிகளை கௌரவிக்க  தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள பழமை வாய்ந்த திருக்கோவில்களின் வளர்ச்சி பணிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தனி துறை தான் இந்து சமய அற நிலையத்துறை. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இதனை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, பழனி, மயிலாடுதுறை, என 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் புணரமைத்தல், சீர்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதேபோல் திருக்கோயில்களில் யானைகளின் புத்துணர்வு முகாம், அன்னதானம் திட்டம், திருவிழாகள் போன்ற பணிகளையும் இத்துறை சிறப்பாக செய்து வருகிறது‌.




இத்திட்டத்தின் கீழ் ஆன்மீக சுற்றுலாத் தலங்களையும்  மேம்படுத்துவதற்காக சமீபத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து 2025- 26 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கைகள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டள்ளன. அதில் திருமணம், ஒரு கால பூஜை திட்டம், புத்தாடைகள் வழங்குதல், பூஜை உபகரணங்கள் வழங்குதல், திருவிழா காலங்களில் கட்டணம் ரத்து, நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், குழந்தைகளுக்கு காட்சியைப் பால் வழங்குதல், ஓதுவார் நியமனம், ஒருநேரம் அன்னதான திட்டம் விரிவுபடுத்துதல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 


அந்த வகையில் தற்போது  இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயதை பூர்த்தி அடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ரூபாய் 2500 மதிப்பில் புடவை, வேஷ்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம், உள்ளிட்ட 11 பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 200 இணை ஆணையர் மண்டலங்களில் தலா 100 தம்பதிகள் வீதம் 2000 தம்பதிகள் சிறப்பிக்கப்பட உள்ளனர்.