பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி.. தரம்சலாவிலிருந்து வெளியேற்றப்படும் கிரிக்கெட் வீரர்கள்!
தரம்சலா: பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குலை அடுத்து பஞ்சாப் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் தரம்சலாவில் இருந்து டெல்லிக்கு கிரிக்கெட் வீரர்களை அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025யின் 58-வது போட்டி நேற்று தரம்சலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மழை காரணமாக, இரவு 7 மணிக்கு டாஸ் போட முடியமால் போனது. பிறகு 8.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் கூட்டணி வலுவான ரன்களை சேர்ந்தது. பிரியன்ஷ் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். மேலும் 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பைப் எடுத்திருந்தனர். பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. பிரியன்ஸ் ஆர்யா, 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், பேட் செய்ய தயாரானார். ஆனால் மைதானத்தில் இருந்த மூன்று கோபுர விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. தொடர்ந்து போட்டி தொழில்நுட்ப காரணங்களுக்காக பாதிலேயே நிறுத்தப்பட்டதாக அறிவித்தது. மைதானத்தை விட்டு கிளம்புமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.
நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு, பதான்கோட்,உதம்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதனை இந்திய ராணுவம் முறியடித்தது. அதேபோல் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. மேலும் எல்லைப் பகுதிகளில் சைரன் ஒலிக்க விட்டு வான்வழி கண்காணிப்பை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர படுத்தினர். இந்த தாக்குதலை அடுத்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிகள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதலைத் தொடர்ந்தே தரம்சலா போட்டி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. டெல்லிக்கு கிரிக்கெட் வீரர்களை அழைத்து வர சிறப்பு வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.