கோயம்பத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் கோர விபத்து.. 3 பேர் பலி

Su.tha Arivalagan
Oct 13, 2025,10:22 AM IST

கோயம்பத்தூர்: கோவையில் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பலியானார்கள்.


கோவையில் அவிநாசி சாலையில் புதிதாக ஒரு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகவும் நீளமான மேம்பாலம் என்று இது வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். இதற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த மேம்பாலத்தை வேடிக்கை பார்க்கவும், அதில் பயணிக்கவும் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் புதிய மேம்பாலத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது, 3 பேரின் உயிரும் பறி போயுள்ளது. நேற்று நள்ளிரவில், உப்பிலிபாளையத்திலிருந்து கோல்ட்வின்ஸ் என்ற பகுதிக்கு பாலத்திலிருந்து ஒரு கார் படு வேகமாக இறங்கி வந்துள்ளது. அப்போது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மிக மோசமான வேகத்தில் மோதியதில் கார் அப்படியே நொறுங்கிப் போனது. மோதிய வேகத்தில் நசுங்கிய கார், லாரியின் கீழ் பகுதிக்குள் புகுந்து நொறுங்கியது.




உடனடியாக போலீஸார் விரைந்து வந்து லாரிக்குள் சிக்கிய காரை கடுமையாக போராடி மீட்டனர். காரில் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்திருந்தனர்.


புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் படு வேகமாக கார் ஓட்டி வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புதிய பாலம் என்பதால் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதேசமயம், அந்த பாலம் நமக்குப் பழகும் வரை மிதமான, கட்டுப்பாடான வேகத்தில் கார்களை, வாகனங்களை இயக்குவதுதான் சரியானதாக இருக்க முடியும். ஆர்வம் இருக்கும் அதேசமயம், முன்னெச்சரிக்கையுடனும் வாகனங்களை ஓட்டுவது முக்கியம்.