இலங்கையை புரட்டி போட்ட புயல்...பலி எண்ணிக்கை 33 ஆனது

Su.tha Arivalagan
Nov 27, 2025,03:47 PM IST

கொழும்பு : இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கிய இந்த கனமழை காரணமாக, நிலச்சரிவுகளும் வெள்ளப்பெருக்கும் தீவு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.


இலங்கைக்கு தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. இலங்கை அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி, வங்கக் கடலின் இலங்கை கடலோர பகுதியில் வலுப்பெற்றுள்ளது. இதுவே இத்தகையே பெரும் மழை பெய்து, கடும் சேதம் ஏற்பட்டதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.




பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) அறிக்கையின்படி, இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 19 பேர் பதுளை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் காயமடைந்துள்ளனர். இந்த கனமழை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் இந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. மேலும் 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 131 பேர் 5 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசர காலங்களில் 117 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், நிவாரணப் பணிகளைத் தடையின்றி வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


இலங்கையில் பல பகுதிகளில் விளை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளன. இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன.