S Sripriya Short Story: நன்றி மறப்பது நன்றன்று!
- பன்முகத் திறமையாளர் ச.ஸ்ரீபிரியா பழனிவேலு
பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் இருந்தது மேலத்தெரு. அங்கே ஓட்டு வீட்டில் வசித்தான் ரகு. அப்பா இல்லை. அம்மா முருகம்மாள் வீடு வீடாக பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து ரகுவை படிக்க வைத்தாள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. ரகுவுக்கு புது ஷூ வாங்க காசு இல்லை. பக்கத்து வீட்டு ராமையா தாத்தா அதைப் பார்த்தார். மௌனமாக கடைக்குப் போய் ஒரு ஜோடி ஷூ வாங்கி வந்து கொடுத்தார்.
"தாத்தா... காசு..." என்று ரகு தயங்கினான்.
"படிச்சு பெரிய ஆளா வா. அதுவே போதும்," என்று சிரித்தார் தாத்தா.
ரகு நன்றாக படித்தான். மாவட்டத்தில் முதல் மதிப்பெண். கலெக்டர் ஆக வேண்டும் என்று கனவு. சென்னையில் தங்கி படித்தான். ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி. திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆனான்.
பதவி, புகழ், பங்களா, கார். ரகுவின் வாழ்க்கை மாறியது. அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டான்.
ஐந்து வருடம் ஓடியது. ஒருநாள் ரகுவின் அலுவலக வாசலில் ஒரு கிழவர். கிழிந்த வேட்டி. கையில் மனு. காவலாளி விரட்டினான். "ஐயா பிஸி. அப்புறம் வா."
கிழவர் கெஞ்சினார், "ஒரு நிமிஷம் பார்த்தா போதும் தம்பி. நான் ரகு தம்பிய..."
"ஐயா பேரை சொல்லி கூப்பிட உனக்கு என்ன தகுதி?" என்று காவலாளி அதட்டினான்.
உள்ளே இருந்து வந்தார் உதவியாளர். கிழவரைப் பார்த்ததும் முகம் சுளித்தார். "யாருப்பா நீ? வெளிய போ."
ரகு காரில் ஏறும்போது கிழவரை ஒரு கணம் பார்த்தான். யாரோ பிச்சைக்காரர் என்று நினைத்து காரை கிளப்பிவிட்டான்.
அந்தக் கிழவர் ராமையா தாத்தா.
அன்று இரவு ரகுவின் அம்மா கேட்டாள், "ரகு, ராமையா மாமா ஊர்ல சாகக் கிடக்காராம். பேரன் போன்ல சொன்னான். ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமா?"
ரகுவுக்கு தூக்கி வாரிப் போட்டது. "என்னம்மா சொல்ற? அவரா இன்னிக்கு..."
அடுத்த நாள் விடியலில் ஊருக்கு ஓடினான். ராமையா தாத்தா குடிசை வாசலில் கூட்டம். உயிர் பிரிந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.
தலைமாட்டில் இருந்தது ஒரு சின்ன பெட்டி. தாத்தாவின் பேரன் சொன்னான், "தாத்தா உங்களுக்கு கொடுக்கச் சொன்னார்."
பெட்டிக்குள் பழைய ஷூ பில். 15 வருடத்துக்கு முன் ரகுவுக்கு வாங்கிய ஷூவின் ரசீது. அதன் பின்னால் தாத்தாவின் கைநடுங்க எழுதிய வரிகள்:
"ரகு தம்பி,
நீ கலெக்டர் ஆன செய்தி பேப்பர்ல படிச்சேன். ரொம்ப சந்தோசம். உன்னைப் பார்க்க வந்தேன். என் வீடு ஆக்கிரமிப்புல இருக்குன்னு நோட்டீஸ் வந்துருச்சு. நீதான் காப்பாத்தணும்.
உனக்கு ஷூ வாங்கிக் கொடுத்தப்போ எதுவும் எதிர்பார்க்கல. நீ நல்லா வரணும்னு மட்டும் நினைச்சேன். இப்போ உதவி கேக்குறேன். தப்பா நினைக்காதே. ராமையா"
ரகு தரையில் மண்டியிட்டு கதறி அழுதான். "தாத்தா! என்ன மன்னிச்சிடுங்க தாத்தா!"
ஊரே அழுதது. ரகு அன்றே ஆக்கிரமிப்பு நோட்டீஸை ரத்து செய்தான். தாத்தா வீட்டை அரசு செலவில் கட்டிக் கொடுத்தான். வீட்டு வாசலில் எழுதி வைத்தான்:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று - குறள் 108
ஒருவர் செய்த உதவியை காலம் முழுக்க மறக்கக்கூடாது. பதவி வந்ததும் பழசை மறந்தால், பதவியும் புகழும் நிலைக்காது. நன்றி மறந்தவன் மனிதனே இல்லை.
(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவி தலைமை ஆசிரியர் , பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை)