வித்யாரம்பம் நிகழ்வு... கல்விக் கண் திறப்பு விழா.. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மாலை அணிவித்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு நிகழ்வாக நடைப்பெற்றது.
நாடு முழுவதும் இன்று விஜயதசமி நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளான இன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்நாளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மாலை அணிவித்து தேவகோட்டையில் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு நிகழ்வாக நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி , ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வாழை இலையில் வைத்து நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர். புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார். புதிதாய் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.