வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட வயலாநல்லூர் ஊராட்சியில் இன்று பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார். மேலும் இதில், வயலாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஏராளமான மாணவ - மாணவிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள், "நமது வாக்கு - நமது உரிமை", "ஜனநாயக கடமையாற்றுவோம்", "100 சதவீதம் வாக்களிப்போம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பொதுமக்களிடையே தார்மீக அடிப்படையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் எவ்வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல், தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களே வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. நமக்கு ஜனநாயகம் அளித்துள்ள மாபெரும் உரிமைதான் ஓட்டுரிமை. அதை சரியாக பயன்படுத்தி வாக்களிக்கும் நாளான ஏப்ரல் 23ம் தேதி உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்கைச் செலுத்தி கடமையை நிறைவேற்றுங்கள்.