சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

Su.tha Arivalagan
Jul 11, 2025,05:10 PM IST

டெல்லி: சாதனை இந்தியரான சுபான்ஷூ சுக்லா மற்றும் அவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற குழுவினர் ஜூலை 14 அன்று பூமிக்குத் திரும்புகிறார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தர நாசா தயாராகி வருகிறது. 


சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சுபான்ஷூ சுக்லா தலைமையிலான விண்வெளி வீரர்கள் குழு, வரும் ஜூலை 14ஆம் தேதி பூமிக்குத் திரும்ப உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க நாசா விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். விண்வெளிக்குச் சென்ற 2வது இந்தியரும் ஆவார். இதற்கு முன்பு ராகேஷ் சர்மா போயுள்ளார்.  இவரது குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, பல்வேறு அறிவியல் பரிசோதனைகள், விண்வெளி சூழலில் மனித உடலின் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள், புதிய தொழில்நுட்பப் பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக நடத்தியது. 




இவர்களது ஆய்வுகள், எதிர்கால செவ்வாய் கிரகப் பயணங்கள் மற்றும் நீண்டகால விண்வெளிப் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜூலை 14ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைய உள்ள விண்வெளி வீரர்கள், பிரத்யேக 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' (SpaceX Dragon) விண்கலத்தின் மூலம் தரையிறங்குவார்கள். வழக்கமாக, விண்வெளி வீரர்கள் மெக்ஸிகோ வளைகுடா அல்லது புளோரிடா கடற்கரை அருகே தரையிறங்குவார்கள். தரையிறங்கும் இடம் மற்றும் நேரம் குறித்த துல்லியமான தகவல்கள், விண்கலத்தின் பயணம் மற்றும் வானிலை நிலையைப் பொறுத்து இறுதி செய்யப்படும். தரையிறங்கியதும், விண்வெளி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிறப்பு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுவார்கள்.


நாசா, சுபான்ஷூ சுக்லா மற்றும் அவரது குழுவினருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. குழுவினர் தரையிறங்கும் இடத்தில் நாசாவின் உயர் அதிகாரிகள், சக விண்வெளி வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனப் பலர் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வை உலக அளவில் நேரலையாக ஒளிபரப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. பொதுமக்களும் விண்வெளி வீரர்களை வரவேற்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுபான்ஷூ சுக்லாவின் வருகைக்காக இந்தியாவும் ஆவலோடு காத்திருக்கிறது. விண்வெளி நிலையத்தில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார் சுபான்ஷு சுக்லா என்பது நினைவிருக்கலாம்.