கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!

Su.tha Arivalagan
May 04, 2025,04:51 PM IST

சென்னை: சென்னையில் அடித்துக் கொளுத்தி வந்த வெயிலுக்கு நடுவே இன்று திடீரென பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. திடீரென வந்த பேய் மழையால் மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் வீடுகளுக்குள் வெட்கை தணியவில்லை.


சென்னையிலும் தமிழ்நாட்டின் இதர நகரங்களிலும் சரி கடுமையான வெயில் அடித்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியவில்லை. இரவிலும் கூட வெகு நேரத்திற்கு புழுக்கம் போகவில்லை.


இந்த நிலையில் இன்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் திடீரென வானம் இருட்டி வந்தது. ஊரே கும்மிருட்டில் மூழ்கியது போல காணப்பட்டது. சற்று நேரத்தில் சூறைக் காற்று வீசத் தொடங்கி ஏதோ புயல் தாக்கியது போன்ற உணர்வைக் கொடுத்தது. அதன் பிறகு அடித்து வெளுத்து வாங்கியது கன மழை.




பலத்த காற்றும், இடி மின்னலுடன் கூடிய மழையமாக சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் மழையின் அடர்த்தி அதிகமாகவே இருந்தது.


கொளுத்தி வந்த வெயிலுக்கு இந்த திடீர் கன மழை மக்களின் மனதுக்கு குளிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேசமயம், வெக்கை முழுமையாக தணியவில்லை. 


இன்று கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே இடி மின்னல் காற்றுடன் கன மழையும் பெய்துள்ளதால் இந்த கத்திரி வெயிலை சற்று ஆறுதலாகவே கடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு வெதர்மேனும் கூட இந்த அக்னிநட்சத்திர காலத்தில் வெயில் கொடூரமாக இருக்காது, அவ்வப்போது மழையும் இருக்கும் என்று கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.