கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகல்...பரபரப்பு விளக்கம்
சென்னை: தலைவர் 173 பட வாய்ப்பை விட்டுவிட்டாலும், ரஜினி - கமலின் வழிகாட்டுதலை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். விரைவில் உங்களை மகிழ்விக்கும் புதிய படைப்புகளுடன் வருவேன் என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரஜினி நடிக்கும் படத்திற்கான வேலைகளை சுந்தர் சி செய்துவருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ரஜினிகாந்தின் தலைவர்173வது படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. நம் வாழ்க்கையில், நமது கனவுகளில் இருந்து சில நேரம் நாம் விலகிச் சென்றாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுடனான எனது தொடர்பு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். தலை்வர் 173 பட வாய்ப்பை விட்டுவிட்டாலும், ரஜினி - கமலின் வழிகாட்டுதலை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். இவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுக்க நினைத்ததற்காக இருவருக்கும் நன்றி. இந்த செய்தி ரசிகர்களை ஏமாற்றியிருக்கலாம், அதற்காக மன்னிக்கவும். ஆனால், விரைவில் உங்களை மகிழ்விக்கும் புதிய படைப்புகளுடன் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.