கூகுளில் சேர்ந்து 20 வருஷமாச்சு.. இன்னும் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன்.. சுந்தர் பிச்சை ஹேப்பி!

Meenakshi
Apr 27, 2024,05:11 PM IST

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் பணியில் சேந்து 20 ஆண்டுகள் முடிந்துள்ளதாகவும், தொழில்நுட்பம்,  பயனாளர்கள் என தொடங்கி தனது தலைமுடி வரை மாறி விட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார் அந்நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை.


கூகுளை  கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எதையாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உடனே கூகுளை தட்டி விட்டால் போது, நம் எதைப் பற்றி தேடுகிறோமே அதை பற்றிய அனைத்தும் ஆதி முதல் அந்தம் வரை வந்துவிடும். அதனால் தான் நம்மில் பெரும்பாலனவர்கள் கூகுளாண்டவர் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். அத்தகைய கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தான் சுந்தர் பிச்சை.




தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.  ஆரம்பத்தில் சிறிய வேலையில் இருந்த இவர் தற்பொழுது அதன் சிஇஒவாக உயர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13ம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.


இந்த நிலையில்,  தான் கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஏப்ரல் 2, 2004 கூகுளில் எனது முதல் நாள். அதன் பிறகு நிறைய மாறிவிட்டது. தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை. என் தலைமுடி. என்ன மாறவில்லை. இந்த அற்புதமான நிறுவனத்தில் பணிபுரிவதில் நான் பெருமைப்படுகிறேன். 20 ஆண்டுகள் ஆகியும் நான் இன்னும் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


உங்க தலைமுடி மட்டுமா மாறிருக்கு.. உலகமே மாறிப் போச்சு பிச்சை சார்.. இந்த கூகுளால!