மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்

Su.tha Arivalagan
Jun 09, 2026,12:05 PM IST

- கலைவாணி கோபால் 


"மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்" -சுந்தரமூர்த்தி நாயனார். 


பாண்டிய நாடு என்று சொல்கின்ற மதுரையில் பிறந்தவர் நம் மூர்த்தி நாயனார். செட்டி எனும் இனத்தில் வைசிய இனத்தில் உதித்தவர். குடும்பத்தொழிலான வியாபாரத்தை அவர் செவ்வனே செய்து வந்தவர். 


மிளகுக்கு சேர நாடும், சந்தனத்துக்கு தென்பொதிகை மலை கொண்ட பாண்டியநாடும், கன்னட நாடும் பெரும் அடையாளமாக இருந்தன.


மூர்த்தி நாயனார் அனுதினமும் ஆளவாய்க் கோவிலில் குடிகொண்டிருக்கும் சொக்கநாதனை வழிபட காலையும் மாலையும் செல்லும் பொழுது தன் கையாலேயே சந்தனம் அரைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 


அவரிடம் சேவகர்களும் வேலை ஆட்களும் அதிகம் இருப்பினும் இறைவனுக்காக சந்தனம் தன் கையாலேயே அரைக்கப்பட வேண்டும் என்று எண்ணி அதை முழு மனதுடன்அதீத... அன்புடன் பெருமானுக்கு செய்து வந்தார்.


சந்தன கட்டை  இழைப்பதில் சில விதிகள் உள்ளன. பன்னீரை தெளித்து அரைத்த சந்தனத்தை கட்டைவிரல் தவிர மற்ற விரல்களால் வழிக்க கூடாது. அதை வெண்கல கும்பாவில் எடுத்து மரியாதையாக வழிபாட்டுக்கு கொடுக்க வேண்டும். இத்தகைய செயலை இறைவனுக்கு தினந்தோறும் செய்து வந்தவர் மூர்த்தி நாயனார். அத்தகைய சிவ தொண்டினை தனது ஆழ்மனத்தின்... அடியிலிருந்து அதை மகிழ்வோடு செய்து வந்தார். 


அவரின் மனதை நோக்கிய "சொக்கநாதர் பெருமான்" அவரை பெரும் அடையாளமாக காட்ட எண்ணி தன் நாடகத்தை தொடங்கினார்.


அப்பொழுது... மதுரையினை ஆண்டு கொண்டிருந்த "பல்யாக முதுகுடுமி பெருவழுதி"  எனும் பாண்டிய மன்னன் காலமானார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால் ,நீண்ட நாட்களாக பாண்டிய அரசை கைப்பற்றி நினைத்த கருநாட்டு மன்னன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுரைக்குள் களம் புகுந்தான் .அவன் சமண சமயத்தை சார்ந்தவன்.


நீண்ட நாட்களாகவே சைவத்தை அழிக்க  திட்டமிட்டு கொண்டிருந்தவனுக்கு ஆட்சி கையில் கிடைத்ததும் பூஜைக்கு முக்கிய பங்காக மக்களிடம் கருதப்படும், சந்தனத்திற்கு ரகசியமாக தடை விதித்தான். 




இதை சற்றும் எதிர்பாராத மதுரை மக்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றும் சந்தனம் கிடைக்கப்பெறாததால், பெரும் மனக்கவலைக்கு ஆளானார்கள்.  அதிலும் காலை ,மாலை, என சொக்கநாத பெருமாளுக்கு, இருவேளையும் சந்தனம் அரைத்துச் செல்லும் நமது மூர்த்தி நாயனார் பித்து பிடித்தார் போல் கதறி அழுதார். இனி சைவ மதம் என்னாகுமோ? பூஜைகள் எப்படி நடக்குமோ? என்று எண்ணி மிகவும்  வருந்தி கதறி அழலானார்.


மனக் கவலையிலிருந்த அவருக்கு சந்தனம் அரைக்காத இக்கைகள் எதற்கு ?என்று கருங்கல்லில் தனது இரு கைகளையும் சந்தனம் எவ்வளவு அழுத்தமாக அரைக்க வேண்டுமோ? அதுபோல ,தனது கைகளை அக்கல்லில் தேய்த்து அரைக்கலானார் அதிலிருந்து ரத்தம் கொட்டியது. எலும்பும், நரம்பும் ,மஜ்ஜையும், உதிர்ந்தன .உதிரம் ஆறாக ஓடியது. 


இதற்கு மேல் சோதிக்க விரும்பாத பெருமான்" பார்வதி தேவியுடன் அவருக்கு காட்சி கொடுத்து ,இந்த சூழ்நிலை மாறும், பூஜைகள் நீ !நினைத்தது போலவே நடக்கும், உன் பணிகள் முடித்தவுடன் கைலாயம் நீர் வருவீராக! என மூர்த்தி நாயனரிடம் சொல்லி மறைந்தார்.


அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத வேலையில் கருநாட்டு சமண மன்னன் இறந்தான். இவன் சமண மதத்தை சார்ந்தவன் என்பதால் மேலும் இதை விட்டு விட்டால் சமண மதத்தவர்கள்  மதுரையை மீண்டும் கைப்பற்றி விடுவார்கள் என்று எண்ணி அரண்மனையில் இருந்தோர் பட்டத்து யானை மூலம் மன்னனை தேர்வு செய்ய எண்ணி பட்டத்து யானையை   தெருக்களில் மாலையை கொடுத்து நடக்க விட்டனர். 


சிவன் கோயிலுக்காக தூய்மையான நெய்யை கொண்டு சென்றிருந்த மூர்த்தி நாயனாரை நோக்கி பட்டத்து யானை நடந்தது. மாலையை அவர் கழுத்தில் போட்டு அவருக்கு மண்டியிட்டு வணங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் அவர் மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதும் ,அவர் நகைகள் அணியாமல் கழுத்தில் ருத்ராட்சம் மட்டுமே அணிந்திருந்தார். 


மணிமகுடம் அணியாமல்  தன்னுடைய சடாமுடி கொள்வேன் என்றும், பட்டாடை இல்லாமல் திருநீறு மட்டுமே அணிந்து சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். 


சந்தனம் பழையபடி நாட்டிற்குள் கொண்டு வந்தார். சொக்கநாத பெருமாளுக்கு இருவேளையும் சந்தனம் அரைத்துச் செல்லும் வேலையை மன்னனாக  இருந்த போதிலும் இறைவனுக்காக தானே அரைத்துக் கொடுக்கும் கடமையை செய்து வந்தார்.


அது மட்டும் அல்லாமல், சைவத்தின் அடையாளங்களான திருநீறு , ருத்ராட்சம், சடைமுடி என மூன்று அடையாளங்களை தாங்கி நாட்டை ஆண்டார். இதனாலேயே, இவருக்கு" மும் மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் என்று பெருமைப்படுத்துகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.


இவரின் குருபூஜை ஆடி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், கொண்டாடப்படுகிறது .அன்று எல்லா சிவாலயங்களிலும் சந்தனம் மணக்க மணக்க, சாற்றப்பட்டு பூஜைகள் சிறப்பாக நடைபெறும். அதிலும், மதுரையில் வெகு சிறப்பாக இவரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. 


அவர் எந்த கல்லில் தன் கைத்தோலும் சதையும், நரம்பும் தேய ,அறைத்தாரோ! அக்கல் இன்றும் மீனாட்சியம்மன் சன்னதி அருகே இன்றளவும் உள்ளது.