Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
சென்னை: முதல்வர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததில் எனக்குப் பொறாமை இல்லை. மாறாக ஆச்சரியம் கலந்த சந்தோஷமே வந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தவெக ஆட்சியமைக்கத் திணறியது. அப்போது திமுகவையும், அதிமுகவையும் இணைந்து செயல்பட சிலர் முயற்சிப்பதாகவும், ரஜினிகாந்த் அதன் பின்னணியில் இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் பதில் தரப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு செய்தியாளர்களை வரவழைத்து ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். அவரது பேட்டியிலிருந்து:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பரவலாக ஒரு தகவல் பரவியது. அதற்குப் பதில் தராவிட்டால் உண்மையாகி விடும். இடையில் சில முறை செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேச முயன்றேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இனியும் தள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த சந்திப்பு.
முதலில் தேர்தல் முடிவு வந்ததும், ஸ்டாலின் சாரைப் பார்த்தேன். அதுகுறித்து விமர்சனங்கள் வந்தன. 40 வருட நண்பர். எங்களது நட்பு கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் தோல்வி வெற்றி சகஜம். இருப்பினும் ஸ்டாலின் தோல்வியால் சங்கடமாக இருந்தது. அதற்காக நண்பர் என்ற முறையில் அவரைப் பார்த்தேன்.
2வது, விஜய் சிஎம் ஆகக் கூடாது என நான் தடுக்க முயன்றதாக பேச்சுக்கள் வந்தன. வேறு கட்சியுடன் சேர நான் முயற்சித்ததாக தகவல் பரவியது. இது தவறான தகவல். அப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்ய ரஜினிகாந்த தரங்கெட்டவன் இல்லை. அதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
விமான நிலையத்தில் நான் விஜய்க்கு வாழ்த்து் சொல்லவில்லை என்று ஒரு விமர்சனம். நான் அந்த சமயத்தில் விமான நிலையத்திற்கு வந்தபோது மீடியா ஆட்கள் இருக்காங்களா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். அப்போது நான் போய்க் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வந்து கேள்வி கேட்டார். அவரைப் பார்த்தால் மீடியா ஆள் போலவே இல்லை. இதனால், சிரித்துக் கொண்டே போய் விட்டேன். அதை வைத்து வாழ்த்துச் சொல்லவில்லை என்று செய்தி பரவியது.
விஜய் மீது எனக்குப் பொறாமை என்று ஒரு விமர்சனம். அரசியலில் நான் இல்லை. இல்லாதபோது ஏன் எனக்குப் பொறாமை வரும். ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வராகியிருந்தால் பொறாமை வந்திருக்குமோ தெரியவில்லை. அப்பக் கூட வராது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது.. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.
எனக்கும் விஜய்க்கும் இடையே ஜெனரேஷன் கேப். 28 வயது வித்தியாசம். எங்களை ஒப்பிட்டுக் கொண்டால் இருவருக்கும்தான் கெட்ட பெயர். விஜய், சின்ன வயதில், எம்ஜிஆர், என்டிஆர் சாதனையை விட ஜாஸ்தியாக சாதித்துள்ளார். தனி ஆளாக வந்து ஜெயித்துள்ளார். எனவே அவர் மீது நிச்சயம் பொறாமை இல்லை. ஆச்சரியம், ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான்.
விஜய் மீது எதிர்பார்ப்பு உள்து. அதை அவர் சந்தித்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். தவெகவினர் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். காரணம், அவர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜய்யைப் பாதிக்கும்.
நான் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று நீண்ட விளக்கமே கொடுத்துள்ளேன். தெரிந்தும் கூட ஏன் வரவில்லை என்று கேட்பது சரியாக இல்லை. நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன். ஆனால் வரவில்லை. அதற்கான காரணத்தை மீண்டும் மீண்டும் நான் எத்தனை காலத்துக்குச் சொல்லிக் கொண்டிருப்பது. அரசியல் என்பது பெரிய பொறுப்பு. அது எளிதல்ல.
விஜய்யை நடிகர் சங்கத்தினர் சந்தித்துள்ளனர். கமல் சந்தித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கமும் சந்திக்கவுள்ளது. மீண்டும் மீண்டும் சம்பிரதாயததிற்காக சந்திப்பது சரியாக இருக்காது. விஜய் நிச்யம் மக்களுக்கும் திரைத்துறைக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் மாற்றம் தேவை என்று கருத ஆரம்பித்துள்ளனர். அந்த சமயத்தில் விஜய் வந்துள்ளார். விஜய்க்கு திரைத்துறையில் கிடைத்த புகழ் 100 சதவீதம் பயன்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது பதவியேற்பில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டதால் அதில் மட்டும் நான் கலந்து கொண்டேன். விஜய்க்கும், அவரது ஆட்சிக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள் என்றார் ரஜினிகாந்த்.