நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல் தொடர்பான மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. விசாரணையின் போது, காவல்துறை நடந்து கொண்ட முறைக்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
வரம்பு மீறிய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது :
விசாரணையின் போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், "தீவிர போராட்டம் நடக்கிறது என்பதற்காக காவல் துறையின் வரம்பு மீறிய தாக்குதலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். அமைதியாகப் போராடும் உரிமையை மறுக்கவோ, காவல் துறையினர் தங்களது எல்லையை மீறி பலத்தைப் பயன்படுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் அதிரடியாகக் குறிப்பிட்டது.
ஒவ்வொரு உயிரும் முக்கியம் :
மாணவர்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய உச்சநீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் உட்பட ஒவ்வொரு தனிநபரின் உயிரும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுட்டிக்காட்டியது. உணர்ச்சிப் பெருக்கோடு போராடும் மாணவர்களைக் கையாளும் போது நிதானம் அவசியம் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.
நாடு முழுவதும் சீரான வழிகாட்டு நெறிமுறைகள் :
நாட்டில் ஆங்காங்கே ஏற்படும் போராட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பாக நாடு முழுவதும் ஒரே சீரான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. போராட்டங்களின் போது காவல்துறையினர் வரம்பு மீறி நடப்பதைத் தடுக்கவும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள வேளையில், இதே விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் வரை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த எதிர்க்கட்சிகள், இன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதுடன், நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.