கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

Manjula Devi
Jun 17, 2025,01:19 PM IST

டெல்லி:  கர்நாடக உயர்நீதிமன்றம் சட்டத்தின்படிதான் செயல்பட்டிருக்க வேண்டும். கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கக் கூடாது. எப்படி அப்படி கூற முடியும். தக்லைப் படம் சட்டப்படி திரையிடப்பட வேண்டும். அதைத் தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைப் படம் நாடு முழுவதும் ரிலீஸான நிலையில், கர்நாடகத்தில் மட்டும் திரையிடப்பட முடியவில்லை. காரணம், கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் அவதூறாகப் பேசி விட்டார் என்று கர்நாடகாவில் கன்னட அமைப்புகள், பாஜக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால். இதையடுத்து படத்தைத் திரையிடுவதற்கு கன்னட திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்து விட்டது.


இதை எதிர்த்து கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றமோ, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. கமல்ஹாசனோ, தவறு செய்திருந்தால்தான் மன்னிப்பு கேட்க முடியும்.. தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்று அதிரடியாக கூறி  தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து விட்டார்.




மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. அதை இன்று விசாரித்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், கர்நாடக உயர்நீதிமன்றத்தைக் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் கூறுகையில், நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்துச் சொன்னால், மக்கள் அதை விவாதிக்கலாம், ஆனால் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை நிறுத்த முடியாது.


'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும். முறையாக சான்றிதழ் பெற்ற படத்தைத் தடை செய்ய முடியாது. பேச்சுரிமைக்கு மரியாதை தரப்பட வேண்டும். கர்நாடகத்தில் படம் ரிலீஸாவது குறித்து ஒரு நாளுக்குள் பதிலளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


கமல்ஹாசனின் கருத்துக்களுக்காக அவரிடம் கர்நாடக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோரியிருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுடன், 'தக் லைஃப்' தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றத்திற்கே மாற்றியுள்ளது.