T20 World Cup: ஈடன் கார்டனை அதிர விட்ட சேட்டன் சஞ்சு.. செம ஆட்டம்.. செமி பைனலில் இந்தியா!

Su.tha Arivalagan
Mar 01, 2026,06:58 PM IST
கொல்கத்தா: கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானம் இன்று மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. இது வெறும் சூப்பர்-8 ஆட்டம் மட்டுமல்ல, உலகக்கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் ஒரு வாழ்வா-சாவா போராட்டம். இந்தப் போராட்டத்தில் இந்தியாவை அதிரடியாக வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார் சஞ்சு சாம்சன்.

தென்னாப்பிரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்தியாவும் தற்போது அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 



முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் நிதானமாகவும், அதே சமயம் அவ்வப்போது சிக்ஸர்களைப் பறக்கவிட்டும் வலுவான அடித்தளமிட்டனர். குறிப்பாக, ரோஸ்டன் சேஸ் இரண்டு முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பிலிருந்து தப்பியது இந்திய ரசிகர்களுக்கு சற்று கவலையைத் தந்தது.

இருப்பினும், இக்கட்டான நேரத்தில் பந்துவீச வந்த ஜஸ்பிரித் பும்ரா, தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் ரோவ்மன் பவல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

சாம்சன் - திலக் வர்மாவின் அபார ஆட்டம்

196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆனால், சஞ்சு சாம்சன் மறுமுனையில் அதிரடியைக் காட்டி வந்தார். 

ஒரு பக்கம் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்கள் விழுந்து வந்த நிலையில் சஞ்சு சாம்சன் கொஞ்சம் கூட கலங்காமல் அதிரடியாக வெளுத்துக் கட்டி வந்தார். அவரது ஆட்டம்தான் இன்றைய போட்டியின் செமத்தியான விருந்தாக அமைந்தது. தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்க விட்ட அவர் இந்தியாவுக்கு இருந்து வந்த அழுத்தத்தை அழகாக குறைத்துக் கொண்டே வந்தார்.



சஞ்சு சாம்சன் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளாக விளாச, மறுமுனையில் திலக் வர்மா இக்கட்டான சூழ்நிலையிலும் பயமின்றி சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.  அவரது ஆட்டத்தில் கடைசி வரை அதிரடி குறையவே இல்லை என்பதே இன்றைய சிறப்பு. கடைசி நேரத்தில் சஞ்சுவுடன் இணைந்த ஷிவம் தூபே அட்டகாசமாக விளையாடி இந்தியாவின் வெற்றியை எளிதாக்கி உதவினார். இந்தியா 19. ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து அபாரமாக அரை இறுதிக்குள் நுழைந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது.

சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் பிரித்து மேய்ந்து விட்டார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியைப் பறக்க விட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அவரது ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 97. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா அரை இறுதிப் போட்டிக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியைச் சந்திக்கும்.