Motivation: தன்னம்பிக்கை!
- தி.மீரா
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கும் ஒரு உயர்ந்த பண்பு. தன்னுடைய திறமை, முயற்சி, முடிவு ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவரே எந்தத் தடையையும் கடந்து வெற்றி பெற முடியும் .
மனிதன் பிறக்கும் போது அறிவோ, அனுபவமோ முழுமையாக இருப்பதில்லை. ஆனால் காலப்போக்கில் கற்றல், பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் அவன் வளர்கிறான். இந்த வளர்ச்சிக்கு முதன்மையான தூண்டுகோல் தன்னம்பிக்கையே. தன்னம்பிக்கை கொண்டவர் தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சமாட்டார்; முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார் .
தன்னம்பிக்கை இருந்தால் சிறிய சிக்கல்கள்கூட பெரிய தடைகளாகத் தோன்றாது. “நான் இதைச் செய்ய முடியும்” என்ற மனநிலை செயல்திறனை உயர்த்தி, முடிவெடுப்பில் உறுதியை உருவாக்குகிறது
வெற்றி பெற்ற பலரின் வரலாறுகளைப் பார்த்தால், அவர்கள் முதலில் தம்மை நம்பி, பிறகு உலகை நம்ப வைத்தவர்கள் என்பதைக் காணலாம் .
தன்னம்பிக்கை குறைந்தால் மனத்தில் அச்சம், தயக்கம், குழப்பம் அதிகரிக்கும். இத்தகைய நிலை ஒருவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் செய்வதோடு, வாய்ப்புகளை இழக்கவும் காரணமாகும்
சிலர் தங்களைப் பிறருடன் ஒப்பிட்டு மனச்சோர்வு அடைகிறார்கள்; இதுவே முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக அமைகிறது.
தினமும் சிறிய இலக்குகளை அமைத்து நிறைவேற்ற வேண்டும். தமக்குள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும். தோல்வியை முடிவாகக் கருதாமல் பாடமாக ஏற்க வேண்டும். நல்ல எண்ணம், ஒழுக்கம், பயிற்சி ஆகியவற்றை வழக்கமாக்க வேண்டும். நேர்மறையான மனிதர்களுடன் பழகி மனவலிமையை உயர்த்த வேண்டும்
தன்னம்பிக்கை என்பது வெறும் மனநிலை அல்ல; அது வெற்றியை உருவாக்கும் சக்தி. தன்னை நம்புகிறவன் உலகத்தையே மாற்றும் ஆற்றல் பெறுகிறான். ஆகவே ஒவ்வொருவரும் தமது உள்ளத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, உறுதியுடன் செயல்பட்டு உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும்
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)