பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி.. மதுரைக் காஞ்சி கூறும் மதுரையின் சிறப்புகள்!

Su.tha Arivalagan
Jul 14, 2026,02:44 PM IST

- தி.மீரா


சங்க இலக்கியமான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி, மாங்குடி மருதனார் இயற்றிய புகழ்பெற்ற நூலாகும். இது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனையும், மதுரை மாநகரின் வளத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது.


அகன்ற தெருக்கள், உயர்ந்த மாட மாளிகைகள், வலிமையான மதில்கள் கொண்ட நகரமாக மதுரை விளங்கியது.


உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து வணிகர்கள் வந்து முத்து, பொன், மணிகள், மசாலா பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்தனர். சந்தைகள் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி, பொருளாதார வளம் மிகுந்த நகரமாக இருந்தது.


பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நீதியுடனும் அறநெறியுடனும் ஆட்சி புரிந்தான். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் போற்றப்பட்டனர்; தமிழ் வளர்ச்சிக்கு மதுரை மையமாக இருந்தது.




கோயில்கள், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவை மக்களின் ஆன்மிக வாழ்வை வெளிப்படுத்துகின்றன. மதுரை மக்கள் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் பண்புடையவர்களாக இருந்தனர். இன்முகத்துடன் விருந்தினர்களை வரவேற்பதோடு அல்லாமல் அவர்களுக்கு அறுசுவை உணவளித்து நன்கு கவனித்து வழியனுப்பி வைத்தனர்.


காவலர்கள் இரவும் பகலும் நகரைக் காத்து, மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்தினர். வைகை ஆறு, வளமான வயல்கள், தோட்டங்கள், பூஞ்சோலைகள் மதுரையின் இயற்கை அழகை உயர்த்தின.


அறம், ஒழுக்கம், வீரத்தன்மை, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் செழித்து விளங்கிய பண்பாட்டு தலைநகராக மதுரை திகழ்ந்தது. 


மதுரைக் காஞ்சி கூறும் மதுரை, செல்வம், கல்வி, கலை, வணிகம், நல்லாட்சி, பண்பாடு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கிய சங்ககாலத்தின் பெருமைமிக்க மாநகரமாகும். அதன் சிறப்புகளை இந்நூல் வரலாற்றுச் சான்றாகப் பதிவு செய்கிறது என் நாம் அறிகிறோம் 


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)