தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களை விட்டு, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கி படித்தும், வேலை செய்தும் வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருக்கும் பலருக்கும் ஓட்டு, தென் மாவட்டங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களில் தான் உள்ளது. இதனால் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதில் தான் சிக்கலே உள்ளது.
வாக்காளர்கள் பிரச்சனை :
தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதி வேலை நாளான வியாழக்கிழமையில் வருகிறது. தேர்தல் நாளன்று வாக்களிப்பதற்காக, வேலை செய்யும் நிறுவனங்கள் நேரம் அவகாசம் வழங்குவார்கள். சிலர் முழு விடுமுறை கூட அளிப்பார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தி தங்களுக்கு வசதியான நேரத்தில், தங்களின் ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டு போட்டு விட்டு வர முடியும். ஆனால் வெளியூரில் இருப்பவர்களுக்கு, வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய தினமும் அலுவலகம் இருக்கும். அடுத்த நாளும் அலுவலகம் இருக்கும். அதனால் அவர்கள் லீவ் போட வேண்டி இருக்கும். லீவ் எடுக்க முடியாதவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போட முடியாது.
ரயிலில் டிக்கெட் இல்லை :
வேலை செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு லீவ் கொடுத்தால் கூட, சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போடுவதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. ஏப்ரல், மே மாதம் என்பது கோடை விடுமுறை காலம். இதனால் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பார்கள். இப்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, கோடை விடுமுறைக்கு செல்வதற்காக பலரும் ரயில், பஸ்களில் டிக்கெட் புக் செய்து வைத்து விட்டதால், ஏப்ரல் 22ம் தேதி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்திலும் ஏற்கனவே புக்கிங் நிறைவடைந்து விட்டது. வெயிட்டிங் லிஸ்ட் காட்டும் ஒரு சில ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் 150 க்கும் அதிகமாக காட்டுகிறது.
கடந்த முறையே தேர்தலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு ரயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை. சிறப்பு ரயில்கள், பஸ்கள் எதுவும் இயக்காததால் கடைசி நேரத்தில் கிடைக்கும் ரயில், பஸ்சில் பயணித்தவர்களால் ரயில், பஸ்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. அப்படி கூட்டத்திலும் முண்டியடித்து செல்ல முடியாததால் பலரும் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்வதை தவிர்த்தனர். இந்த முறையும் அதே நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பிரச்சனைக்கு தீர்வு :
ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் என்ற விதிமுறை உள்ளதால் பலரும் கோடை விடுமுறைக்காக டிக்கெட்களை புக் செய்து விட்டார்கள். இதனால் தேர்தலுக்கு ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்பவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அப்படியே அவர்கள் ஊருக்கு செல்ல நினைத்தால் தட்கல் டிக்கெட் அல்லது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. ஒரு வேளை இந்த முறை சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டால் இந்த பிரச்சனை நீங்கி, அதிகமானவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டுப் போட முடியும். இதனால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.