Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது

Su.tha Arivalagan
Apr 20, 2026,05:03 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் 2026 க்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்புகளை மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 31ம் தேதி துவங்கி, ஏப்ரல் 06ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. ஏறக்குறைய 7000 க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏப்ரல் 09ம் தேதியன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுமார் 2500 க்கும் அதிகமான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 4158 பேர் மட்டுமே வேட்பாளர்களாக களத்தில் போட்டியிட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. 




தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். மக்களை தொகுதி வாரியாக சென்று நேரடியாக சந்தித்தும், அச்சு ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் என பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்து வந்தனர். தேர்தல் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரத்தை நிறைவு செய்து விட வேண்டும் என்பது தேர்தல் விதி. 


ஏப்ரல் 23ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 21ம் தேதியான நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தலைவர்கள் அனைவரும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக தேர்தல் களம் வழக்கத்தை விட அதிகமாக அனல் பறக்கக் கூடியதாக இருந்து வருகிறது.