பொங்கல் பரிசுத் தொகுப்புடன்.. ரூ. 3000 ரொக்கமும் தரப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 04, 2026,12:50 PM IST

சென்னை: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் என்ற மகிழ்ச்சிச் செய்தியை நேற்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 3000 ரொக்கமும் சேர்த்து அளிக்கப்படும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.


பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அளித்து வருகிறது. அதன்படி கரும்பு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். முன்பு ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதை பின்னர் நிறுத்தி விட்டனர். இந்த நிலையில் இந்த வருடம் மீண்டும் ரொக்கப் பரிசு திரும்பி வந்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:




தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.


இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.


பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.


மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். 


பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.