BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Su.tha Arivalagan
Aug 08, 2025,12:25 PM IST

சென்னை : 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.


தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:




- தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும். 

- 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. 

- இனி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்.

- 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை தொடரும்


இதுதவிர  3,5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. நீட் தேர்வு இருக்கக் கூடாது. கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும். தொடக்க நிலை முதல் பல்கலைகழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டதாக மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.


எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக் கூடாது என்றும் புதிய கல்வி கொள்கை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.