கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!

Su.tha Arivalagan
Dec 26, 2025,06:25 PM IST

- சிவ. ஆ.மலர்விழி ராஜா


நம் வாழ்வில்

பார்க்ககூடாத ஒரு தினம்....

கடலன்னை

அகோர தாண்டவம் 

ஆடிய தினம்....

சின்னஞ்சிறு  குழந்தைகளும்

உறவை பிரிந்த தினம்...

வாழ்வின் முடிவு

இதுதான் என்று

வலியை தந்த தினம்.....

சுறாவை போல் வந்து

உயிர்களை அள்ளி 

விழுங்கிய தினம்.....


அழகான அலையென்று

அருகே சென்றவர்களை

சிறை பிடித்த தினம்....

வலைவீசி மீன் பிடிப்பது

போல் அலை வீசி நம் 

இனம் அழிந்த தினம்.....

ஆழியின் தீராத பசிக்கு

நம் மக்கள் தன்னை

அர்பணித்த தினம்.....

உப்பு காற்றை சுவாசித்த

உயிர்களை உயிர் பலி

வாங்கிய தினம்.....

இனம் மொழி கடந்து 

எல்லாம் ஒன்றென்று

உணர வைத்த தினம்.....

இரக்கமில்லாத மனிதனையும் இயங்க

வைத்த தினம்.....

சுற்றி சுழன்று பட்டு

குழந்தைகளையும்

விட்டு செல்லாத தினம்....

கலங்கரை விளக்கம் இருந்தாலும் கரை

தேடி வந்து உயிர்களை

உள்வாங்கிய தினம்.....

உறவுகளை பிரித்து மனங்களை

இரணமாக்கிய தினம்...

இதயத்தை  உடைத்து 

இரும்பாக்கும்  தினம் 

இனி வாழ்வில் வேண்டாம் 

சுனாமி தினம்......!