சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

Su.tha Arivalagan
Aug 07, 2026,05:08 PM IST

சென்னை : தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காலை அவை துவங்கியது முதலே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே காரசாரமான அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. 


இரு தரப்பினரும் மாறி மாறி பதிலடி கொடுத்து பேசியது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.


பேப்பர் படிக்கிறதே இல்லை :


சட்டசபை கூட்டம் துவங்கியதும் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலளித்த முதல்வர் விஜய், குறுவை சாகுபடிக்கான இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு தரவில்லை என்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசினார். 


அப்போது பேசிய அவர், "குறுவை சாகுபடிக்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. நாங்கள் தான் அரசியல் என சொல்லிக் கொள்பவர்கள் இதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம். பேப்பர் படிக்கும் பழக்கம் இருந்தால் தானே நாட்டு நடப்பு தெரியும் என்றார். 




இதற்கு பதிலளித்த உதயநிதி, "அரசு கொடுத்துள்ளது சிறப்பு  தொகுப்பு தான். அவர்கள் கேட்பது வறட்சி நிவாரணம். பேப்பர் படித்தால் மட்டும் போதாது. பேப்பர் படிப்பதை விட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டும்" என பதிலளித்தார்.


சாராய ஆலை நடத்தும் திமுக.,வினர்:


டாஸ்மாக் குறித்து விவாதம் நடைபெற்ற போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சாராய ஆலைகள் வைத்திருப்பவர்களும் திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். அதற்கான ஏலம் எடுத்து, நடத்துபவர்களும் திமுக.,வினர் என்றார். 


இதற்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது, லாட்டரி விற்கும் நிறுவனத்திடம் நன்கொடை முன்னாள் முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாங்கியது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அந்த லாட்டரி நிறுவனத்தை நடத்துவதே ஆதவ் அர்ஜூனாவின் மாமனார் தான். இதற்கான பதிலை அவரிடமே சென்று கேட்கட்டும்" என்றார்.


இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, அது அவருக்கும் அப்பாவிற்கும் நடந்த டீல். அப்பாவை அவையில் காணோம். அதனால் வீட்டிற்கு சென்று உதயநிதி இது பற்றி அப்பாவிடம் கேட்கட்டும் என்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 


லாட்டரி நிறுவனத்திடம் திமுக நன்கொடை வாங்கியது குறித்து திமுக எம்எல்ஏ.,க்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.