Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

Su.tha Arivalagan
Apr 23, 2026,06:19 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குப் பதிவு படு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாரை சாரையாக வாக்குகளை செலுத்தினர். இத்தேர்தலில் 6 மணி இறுதி நிலவரப்படி 84.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை 19 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன.


தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூரில்தான் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.  காலையிலிருந்தே வழக்கத்தை விட அதிகமாக வாக்குகள் பதிவாகி வந்தன. மதியம் 1  மணி நிலவரப்படி மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 56.81% ஆக இருந்தது. அப்போதே தெரிந்து விட்டது, கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை அதிகமாக வாக்குப் பதிவு இருக்கும் என்று.




வாக்குப் பதிவு விகிதம் அதிகமாக இருக்கக் காரணம் சார் பணிகளே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.  மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 82.25 சதவீத வாக்குகள் பதிவாகின. இது புதிய வரலாறு ஆகும். இந்த நிலையில் தற்போது இறுதி வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டிலேயே அதிக அளவிலான வாக்குப் பதிவானது கொங்கு மண்டலத்தில்தான் பதிவாகியுள்ளது.  கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.


வழக்கமாக மந்தமான வாக்குப் பதிவை வெளிப்படுத்தும் தலைநகர் சென்னையிலும் கூட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் சென்னையில் சராசரியாக 60 சதவீதத்திற்குள்தான் வாக்குப் பதிவு இருந்தது. ஆனால் இந்த முறை 75 சதவீதத்தை எட்டி விட்டது.


வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை நேரங்களில் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது புதிய வரலாறு படைத்து விட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்.


வழக்கமாக அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்தால் அது ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் என்று கருதப்படும். இந்த முறை கூடுதலாக வாக்குப் பதிவு நடைபெற என்ன காரணம் என்பது மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரிய வரும்.