Tamil Nadu Assembly elections: படு விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. அதிர வைக்கும் 1 மணி நிலவரம்!

Su.tha Arivalagan
Apr 23, 2026,02:02 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குப் பதிவு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாரை சாரையாக வாக்குகளை செலுத்த வந்தவண்ணம் உள்ளனர்.


தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மதியம் 1  மணி நிலவரப்படி மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 56.81% ஆக உள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாகும்.


வாக்குப் பதிவு விகிதம் அதிகமாக இருக்கக் காரணம் சார் பணிகளே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. 


அதிக அளவிலான வாக்குப் பதிவானது கொங்கு மண்டலத்தில்தான் பதிவாகியுள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் 62.97% வாக்குப் பதிவுடன், மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் (62.51%), ஈரோடு (61.79%) ஆகிய மாவட்டங்கள் அதிகப்படியான வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளன.


மதியம் 1 மணி வரை, கன்னியாகுமரி (50.35%) மற்றும் நீலகிரி (50.42%) ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே காணப்படுகிறது.




வழக்கமாக மந்தமான வாக்குப் பதிவை வெளிப்படுத்தும் தலைநகர் சென்னையிலும் கூட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக உள்ளது.  சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.


வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை நேரங்களில் வாக்குப்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்களே.. உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தவறாதீர்கள்.. ஓட்டுப் போடாவிட்டால் உடனே கிளம்பிப் போய் போட்டுட்டு வந்துருங்க!