ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

Su.tha Arivalagan
Aug 31, 2026,04:16 PM IST

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் மதுப்பழக்கத்தால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்துப் பேசினார். ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை உடனடியாகக் கொண்டுவர முடியும் என்றாலும், நடைமுறையில் அதில் உள்ள சிக்கல்களையும், அதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புப் பணிகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.


மதுவிலக்கு அமலாக்கத்தில் உள்ள சவால்கள் : 


இன்று தமிழக சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ் முன்பணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புக்களை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். பிற்பகலில் பூரண மதுவிலக்கு குறித்த விவாதம் சட்டசபையில் துவங்கியது.  அதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சில விளக்கங்களை அளித்தார்.




அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ஒரு உத்தரவின் மூலம் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு செய்யும் போது பல சமூக மற்றும் சுகாதார சிக்கல்கள் எழும் என்று அமைச்சர் தெரிவித்தார். வாரத்தில் ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காகக் குடிக்கும் பழக்கம் நாளடைவில் தீவிரமடைந்து, இன்றைக்குப் பலர் முழுமையான ‘குடி நோயாளிகளாக’ மாறியுள்ளனர். சமுதாயமாக நாம் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். தீவிரக் குடிப் பழக்கத்திற்கு ஆளான நபர்களுக்குக் காலையில் கடையைப் பார்த்தவுடனேயே குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது; இல்லையெனில் மாலை 5 மணிக்குக் குடித்தாக வேண்டும். இது மனித உடலின் இயற்பியல் சார்ந்த தீவிரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


மறுவாழ்வு மையங்களின் அவசியம் :


மதுக்கடைகளை மூடுவதற்கு முன்பாகக் குடி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் மறுவாழ்வு மையங்களை (Rehabilitation Centres) அமைப்பது அவசியமாகும். தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான குடி நோயாளிகளைக் கொண்டுள்ளது. இவர்களை மீட்பதற்கு மறுவாழ்வு மையங்களை உடனடியாக உருவாக்கி விட முடியாது. இத்தகைய மையங்களைச் சரியாகச் செயல்படுத்துவதற்குப் போதிய மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் (Counselors) மற்றும் உளவியலாளர்கள் (Psychologists) பெருமளவில் தேவைப்படுகின்றனர்.


விழிப்புணர்வுப் பிரச்சாரம் : 


முன்பு எய்ட்ஸ் நோய் பரவல் அதிகரித்த காலகட்டத்தில், அதைத் தடுப்பதற்காக மிகப்பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்டோம். அதே போன்றதொரு தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் மதுவிலக்கு மற்றும் மதுவின் தீமைகள் குறித்தும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான பலன்களைக் கூடிய விரைவில் பொதுமக்கள் நேரில் காண்பார்கள் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதியளித்தார்.


முழுமையான மதுவிலக்கை நோக்கிய பயணத்தில், வெறும் சட்ட நடவடிக்கைகளோடு நிறுத்தாமல், குடி நோயாளிகளுக்கான உரிய மருத்துவ மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதே சரியான தீர்வாக அமையும் என்பதே அமைச்சரின் உரையின் முக்கியச் சாராம்சமாகும்.