தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

Su.tha Arivalagan
Mar 07, 2026,05:18 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் 2026 க்கான தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்ப்படுகிறது. ராஜ்யசபா தேர்தல் முடிந்த பிறகு மார்ச் 17 அல்லது 18 அன்று ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளை முழு வீச்சில் வேகப்படுத்தி உள்ளன.


தமிழக அரசியலில் கூட்டணிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன. பாமக நிறுவனர் ராமதாஸ் தவிர மற்ற அனைத்து கட்சியினரும் தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை அறிவித்து, கூட்டணியில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பேசி, இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் படுவேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் அனைத்து கட்சிகளிலும் இருக்கும் பிரபலமான தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கசிய துவங்கி விட்டது.




திமுகவில் சமீபத்தில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதி அல்லது ஆன்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு அவரது மகன் ரவீந்திரநாத் சமீபத்தில் விருப்பமனு பெற்றார். ஏற்கனவே தொடர்ந்து 3 முறை அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்கள் என்ற காரணத்தால் திமுக.,வும் ஓபிஎஸ்.,க்கு போடி தொகுதியை ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.


அதே போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறையும் சேப்பாக்கம் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, சேப்பாக்கம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என சொல்லி விட்டார்.


அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளதால் இந்த முறை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதிமுக., கூட்டணி கட்சிக்காக ஒதுக்கிய ராஜ்யசபா சீட்டை பெற்று, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் கமிஷனும் அறிவித்து விட்டது. இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாவது உறுதியாகி விட்டது. அதனால் தமிழக சட்டசபை தேர்தலில் அவரது மனைவி செளமியா அன்புமணியை போட்டியிட வைக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு, பிரபலமான வேட்பாளராக இருக்கும் செளமியா அன்புமணி, இந்த முறை தர்மபுரி அல்லது பென்னகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


திமுக மற்றும் அதிமுக.,வை பொருத்தவரை தங்கள் தொகுதிகளில் நன்கு செல்வாக்கு உள்ள சீனியர்கள் பலருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகள் என்று பார்த்தால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்,வானதி சீனிவாசன், குஷ்பூ, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் இவர்களுக்கு போட்டியாக வலுவான வேட்பாளர்களை திமுக.,வும் களமிறக்க வாய்ப்புள்ளது.