தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு தாமதமாக இது தான் காரணம்

Su.tha Arivalagan
Feb 26, 2026,02:28 PM IST

சென்னை : தற்போது தேர்தல் ஆணையர் குழு தமிழகம் வந்து, ஆய்வு நடத்தி வருகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகளுடனும் இநத குழு ஆலோசனை நடத்த உள்ளது இதனால் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 தேதி குறித்த அட்டவணை இந்த வாரத்திலேயே வெளியாகலாம், தேர்தல் தேதியை வெளியிடு தான் இந்த குழு வந்துள்ளது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அது அல்ல.


2026ல் நடக்க போகும் தேர்தல்கள் :




2026ம் ஆண்டில் தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழகத்துடன் சேர்த்து  அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் என மொத்தம் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலுமே நடந்து சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 2026ம் ஆண்டில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இதில் முதலில் நடக்க போவது மார்ச் 16ம் தேதி நடக்கும் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி., சீட்களுக்கான தேர்தல் தான். அதே போல் 5 மாநில சட்டசபை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள லோக்சபா எம்.பி., பதவிகள், சட்டசபை எம்எல்ஏ., பதவிகள் ஆகியவற்றிற்கு இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.


5 மாநில சட்டசபை தேர்தல் :


ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி, முடிவுகள் வெளியிட வேண்டும். அப்போது தான் மே மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்திற்குள்ளாக புதிய அரசுகள் பதவியேற்க முடியும். ஆனால் இதுவரை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை. அதே சமயம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி விட்டது. அப்புறம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஏன் தாமதம் என நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம் மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தான்.


தேர்தல் தேதி அறிவிப்பு தாதமதத்திற்கு காரணம் :


தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் பல சிக்கல்கள், குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இதை ஆய்வு செய்வதற்காக தான் 250 நீதிகள் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. அங்கு எஸ்ஐஆர் பணிகள் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தான், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக தேர்தல் தேதியை எப்போதும் அறிவிக்கும் வழக்கம் கிடையாது. 


எப்போது தேர்தல் நடக்கும்?


அதனால் தற்போது தேர்தல் அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வது, ஆலோசனை நடத்துவது என அனைத்தும் வழக்கமான நடைமுறைகள் தான். இனி அதிகாரிகள் இடமாற்றமும் மாநிலங்களில் நடக்கும். மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகளில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டுள்ளதால் அந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கலாம். அதனால் அநேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விடும். தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்திற்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அதாவது ஏப்ரல் இறுதிக்குள் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். 


ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்தால் தான், ஒருவேளை எந்த மாநிலத்திலாவது யாருக்கும் பெரும்பான்மை ஏற்படாத நிலை ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என அங்குள்ள கட்சிகள் மற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் புதிய அரசு பதவியேற்க முடியும். தொங்கு சட்டசபை ஏற்படுவது போன்ற இக்கட்டான நிலை ஏற்படும் போது, அடுத்து யார் ஆட்சி அமைக்க போவது என்பதை முடிவு செய்வதற்கு மாநில கட்சிகளுக்கு அவசியம் அளிப்பதற்காக தான் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தேர்தல் பணிகள் நிறைவு செய்யும் வழக்கம் உள்ளது.